பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

285


வர முடிகிறது ? அதன் பின்னணி என்ன ? அதற்கு அடித்தளமாக விளங்கும் சக்திகள் யாவை ?

பிறக்கும்போதே (1964) தன்னை ஒரு முற்போக்கு மாத சஞ்சிகை என்று துணிச்சலாகப் பிரகடனம் செய்து கொண்டது மல்லிகை.

‘ஆடுதல் பாடுதல் சித்திரம் கவியாதியினைய கலைகளில் உள்ளம் ஈடுபட்டென்றும் நடப்பவர். பிறர் ஈனநிலை கண்டு துள்ளுவர் என்ற மகாகவி பாரதியின் வாக்கையும் தனது குறிக்கோள் வாசகமாகப் பொறித்துக் கொண்டது.

கவிதைக்கு மகாகவி பாரதி, சிறுகதைக்கு ’மணிக்கொடி’ தந்த மாணிக்கம் புதுமைப்பித்தன் ஆகியோரைத் தனது முன்னோடிகளாகக் கொண்ட மல்லிகை உலகளாவிய ரீதியில் தனக்கொரு லட்சியத் தலைவனைக் கொண்டுள்ளது. அவர்தம் யுகப் புரட்சியின் சிற்பியான மாமேதை லெனினது நெருங்கிய தோழர், சோஷலிச எதார்த்தவாதம் என்னும் படைப்பு முறையின் தந்தை, மாக்சிம் கார்க்கி. அந்த மும்மூர்த்திகளின் பாதையில், எத்தனையோ இன்னல்களைப் புறம்கண்டு, இருபது ஆண்டுகளாக வெற்றிநடை போடுகிறது மல்லிகை.

ஓர் இலக்கிய இதழின் வெற்றிக்குக் கொள்கைபலம் மட்டும் போதுமா ? போதாது. பரந்து விரிந்த வாழ்க்கை அனுபவமும் வேண்டும்.

1954-ல் வெளிவந்த ரகுநாதனின் சாந்தி, 1959-62 காலகட்டத்தில் வெளியான விஜயபாஸ்கரனின் ’சரஸ்வதி’, கடந்த 25 ஆண்டுகளாக வெளிவரும் ’தாமரை’ முதலிய தமிழக ஏடுகளின் அனுபவமும் மல்லிகைக்கு முன்னுதாரணமாகவும் படிப்பினையாகவும் அமைந்தன. வேறு விதமாகச் சொன்னால், சாந்தி, சரஸ்வதி, தாமரை ஆகியவற்றின் மரபில் தோன்றியதே மல்லிகை. இந்த மரபை மேன்மேலும் செழுமைப்படுத்திவருவதே மல்லிகையின் தனிச் சிறப்பு.

மல்லிகையின் வெற்றிக்கு மற்றொரு முக்கிய காரணம், இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் குரலாக அது ஒலிப்பதுதான்.

இச்சங்கத்தின் கொள்கைகளைப் பட்டிதொட்டியெங்கும் பரப்பும் செயல் வீரனாக விளங்குகிறார் மல்லிகை ஆசிரியர் டொமினிக்