பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/288

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

288

வல்லிக்கண்ணன்


மொழிபெயர்ப்புகளை மல்லிகை பிரசுரித்துள்ளது. இப்பவும் வெளியிட்டு வருகிறது.

இலங்கைத் தமிழ் எழுத்தாளர்கள் தங்களது தேசிய இலக்கியத்தை வளர்க்க உறுதி பூண்டார்கள்.

‘இலங்கை சுதந்திரம் அடைந்த பின், அதுவரை பழங்காலத்தைப் போல அலங்கார வாதங்களிலும் தேவதைக் கதைகளிலும் முழ்கி இருந்த தென் இந்திய இலக்கியச் செல்வாக்கிலிருந்து இலங்கைத் தமிழ் எழுத்தாளர்களை விடுவிக்கும் முகமாகத் தேசிய இலக்கியம் என்ற கோஷத்தை முன் வைத்து முற்போக்கு எழுத்தாளர்கள் கிளர்ச்சி செய்தார்கள். தாயகத்தின் மொழி நடையையும், சமுதாயப் பின்னணியையும் இணங்க இலக்கியம் படைத்தலும், சமுதாய யதார்த்தவாத நோக்கத்தை உண்டு பண்ணுதலும் அத் தேசிய இலக்கியச் சங்கற்பத்தின் லட்சியங்களாகும்.

1956 க்குப் பிறகு ஏற்பட்ட அரசியல், சமுதாய மாற்றங்களினால் இந்தத் தேசிய இலக்கிய சங்கற்பம் பெரிதளவில் கூர்மையடைந்தது. இக் கிளர்ச்சியை மேலும் முன்னுக்குக் கொண்டு சென்ற முற்போக்கு எழுத்தாளர் சங்கம், தேசிய ஒற்றுமை இலக்கியச் சங்கற்பத்தை நிலை நாட்ட ஒரு இயக்கத்தை நடத்தியது. சிங்கள—தமிழ்—முஸ்லிம் இனத்தவர்களிடையில் நல்லெண்ணத்தை வளர்த்தல், இலங்கையின் தேசிய முன்னேற்றத்துக்கு ஒத்துழைத்தல், தேசியப் பிரச்னைகளின்போது இன வேற்றுமைகளைக் கருதாமல் பொதுவாகச் சிந்திக்க மக்களுக்கு வழி காட்டுதல் ஆகியவை அவ்வியக்கத்தின் பிரதான நோக்கங்களாக இருந்தன.‘

மல்லிகையும் இவ்வழியில் செயல்பட்டது. பத்து வருட காலத்தில் 50 சிங்களச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்புகள் மற்றும் கவிதை, கட்டுரை, பத்தக விமர்சனம் என்று சிங்கள இலக்கியங்களைத் தமிழில் தந்துள்ளது. சிங்கள எழுத்தாளர்களையும் அவர்களது படைப்புகளையும் அறிமுகம் செய்யும் முறையில் மல்லிகைச் சிறப்பிதழ் வெளிவந்ததும் குறிப்பிடத்தகுந்தது.

ஈழத்துத் தமிழ் இலக்கியத்தின் பொதுவான வளர்ச்சியையும், குறிப்பாக அவ் இலக்கியத்தின் முற்போக்கு நிலைப்பட்ட ஆழப்பாட்டையும் வற்புறுத்துவதும், அவற்றுக்காகச் செயல்படுவதுமே மல்லிகை தமிழ் சஞ்சிகையுலகில் நிலைநிறுத்த விரும்பும் சுயநியாயப் பாடாகும் என்று இலக்கிய விமர்சகர் கா. சிவத்தம்பி கணித்திருக்கிறார்.