பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

293


இவர்களுக்கு ஓர் எதிர்ப்புக் குரல்கூட நாம் கொடுக்காவிட்டால் இவைகளை நாமும் ஏற்றுக்கொண்டவர்களாகிறோம் என்று கூறிக்கொண்டு வெளிவரத் தொடங்கும் ஒரு சிற்றேட்டின் இலக்கு ’பணம்’ அல்ல. இத்தனை சீரழிவுகளையும் அழித்தொழித்துவிட்டு, தனது இலக்கை அடைந்துவிடுவதென்பதும் சாத்தியமானதொன்றல்ல. ஆனாலும் அவர்களுடைய நோக்கம் நாம் வாழும் காலத்தில் நடக்கும் இந்த அநீதிகளுக்கு நாமும் உடந்தையாகிவிடக் கூடாது என்னும் விழிப்புணர்வு போற்றற்குரியது.

தமிழ்நாட்டிலும் சரி, இங்கும் சரி; இலக்கியச் சிற்றேடுகளின் தோற்றம் தமிழ் இலக்கிய வளர்ச்சியில் குறிப்பிடத்தகுந்த மாறுதல்களை நிகழ்த்தியிருக்கின்றது என்பதை மறுக்க முடியாது.

1930—ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட ’ஈழகேசரி’, 1946 ஜனவரியில் தொடங்கிய ’பாரதி’, 1946 மார்ச்சில் தொடங்கிய ’மறுமலர்ச்சி’, அதற்குப் பின் தோன்றிய இலக்கியச் சிற்றேடுகளும் தம்மாலான பணியினைச் செய்தே மறைந்துள்ளன” (தினகரன் வாரமஞ்சரி, நவம்பர் 18, 1984).

‘ஈழகேசரி’ பல வருட காலம் நடைபெற்ற வார இதழ் ஆசிரியர் : சுன்னாகம் பொன்னையா. சோ. சிவபாதசுந்தரம் ஈழகேசரியில் பணி புரிந்திருக்கிறார். ஈழத்துச் சிறுகதைப் படைப்பாளிகள் பலரும் அதில் கதை எழுதினார்கள். பிற்காலத்தில் நல்ல நாவல்களைத் தொடர் கதையாகப் பிரசுரித்தது. இலக்கியக் கட்டுரைகள், சர்ச்சைகள், புத்தக விமர்சனங்கள் இடம் பெற்றன.

‘மறுமலர்ச்சி’— சில இதழ்களே வெளிவந்தன. வரதர், மகாகவி, அ. ந. கந்தசாமி, அ. செ. முருகானந்தன் போன்ற அந்நாளைய படைப்பாளிகள் இதில் எழுதினார்கள்.

’பாரதி’ யை கே. கணேஷ் ஆரம்பித்து நடத்தினார். திரு. வி. க. விடம் தமிழ் படிப்பதற்காக சென்னைக்கு வந்த கணேஷ் இடதுசாரிகள் பலருடனும் பழகும் வாய்ப்பைப் பெற்றார். நவசக்தி ஆசிரியர் குழுவில் இருந்த கே. ராமநாதன், ஐ. மாயாண்டி பாரதி, சக்திதாசன், சுப்பிரமணியன் ஆகியோருடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டின் பழம்பெரும் எழுத்தாளர்கள் சகலருடனும் பழகிய கணேஷ், கே. ஏ. அப்பாஸ், முல்க் ராஜ் ஆனந்த், கிருஷன்சந்த் போன்ற வட இந்திய எழுத்தாளர்களோடும்