பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

வல்லிக்கண்ணன்


‘யுத்த பீதி, காகிதப் பஞ்சம், கட்டுப்பாடு இந்த நெருக்கடிகளுக்கு இடையில் இன்னுமொரு பத்திரிகையா என்ற நிர்த்தாக்ஷண்யமான கேள்வி நிச்சயம் பிறக்கும்.

அதற்குப் பதில் இது :

இந்தத் தமிழ்நாட்டில் எத்தனை காலம் வாழ முடியுமோ அத்தனை காலம் வாழ்ந்து, தமிழ் பாஷையின் புனருஜ்ஜீவனம் என்ற சேது பந்தனத்திற்கு இந்த அணிலும் தன்னாலான சேவையைச் செய்ய வேண்டுமென்றே கலாமோகினி பிறந்துள்ளது.

தமிழ் மக்களின் ஆதரவையும், தமிழன்னையின் கருணையையும், எல்லாவற்றிற்கும் மேலாக ஈஸ்வரனின் அருளையும் நம்பித்தான் கலா மோகினி பிறக்கிறது.

இவை எந்த அளவில் கிடைக்கிறது என்பதைப் பொறுத்ததே கலாமோகினியின் வாழ்வு, வெற்றி, லட்சியசித்தி எல்லாம்.

முதல் இதழிலேயே தொடர்கதையும், தொடர் நாடகமும் இடம் பெற்றன. ஐரோஸ்லாவ் ஹாஸ்க் எழுதிய நாவல் ஒன்றின் கதையைச் சுருக்கி மொழிபெயர்த்து, 'சூரப்புலி ஷீக்' என்ற தலைப்பில் வெளியிட்டார் வி. ரா. ராஜகோபாலன். 'விக்ரமாதித்தன்’ என்ற புனைபெயரை அதற்கு அவர் பயன்படுத்தினார்.

‘சாலிவாகனன்' என்ற புனைபெயரில் அவர் கவிதைகள் எழுதி வந்தார்.

இவ் இரு பெயர்களையும் வி. ரா. ரா. தனது புனைபெயர்களாகத் தேர்ந்து கொண்டதற்கு ரசமான ஒரு காரணமும் உண்டு.

பாரத நாட்டின் வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த இடம் பெற்றுள்ள மாமன்னர்களின் பெயர்கள் அவை. தனித்தனி சகாப்தம் கண்ட பெருமை பெற்றவர்கள் அவர்கள். சாலிவாகன சகாப்தம், விக்கிரமாதித்த சகாப்தம் என்றவாறு, இந்திய தேச சரித்திரத்தில் விக்கிரமாதித்தன் காலம் பொற்காலம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது. அதேபோல் தமிழ் மொழி வரலாற்றிலும், தமிழ் இலக்கிய மறுமலர்ச்சியிலும் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்க வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தது. தன்னால் அப்படி ஒரு பொற்காலத்தை நிறுவ முடியும் என்ற நம்பிக்கையுடன்தான் அவர் கலாமோகினி யை ஆரம்பித்து, வளர்த்தார்.

கலாமோகினி இலக்கியத்தில் மட்டுமே ஆர்வம் காட்டியது,