பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

31


ஆரம்பத்தில், அதில் அரசியலுக்கு இடம் இல்லை என்று உறுதியாக அறிவிக்கப்பட்டிருந்தது.

‘அரசியல்துறையில் பணியாற்ற ஏற்கனவே தமிழ்நாட்டில் தேவைக்கதிகமான சகோதரப் பத்திரிகைகள் இருக்கும்போது நாமும் அந்தக் குட்டையைக் குழப்புவது அனாவசியம். தமிழ்ப் பணி ஒன்றே நமக்குப் போதுமான இலட்சியமாகக் கொள்ளலாம் என்பது நமது தீர்மானம்' என்று மூன்றாவது இதழில் ஆசிரியர் கருத்து தெரிவித்தார்.

அவர் பழம் தமிழ் இலக்கியத்திலும் ஈடுபாடு கொண்டவர். என் சரித்திரம்' என்று மணிமேகலை காவியக் கதையை, மணிமேகலையே கூறுவது போல், தொடர்சித்திரமாக உரைநடையில் எழுதி வந்தார். ‘சங்க இலக்கியத்திலிருந்து' என்று கட்டுரைகளும் எழுதினார். பெ. கோ. சுந்தரராஜன் ( சிட்டி) எழுதிய ஹர்ஷன் நாடகம் தொடர்ந்து பிரசுரமாயிற்று. -

மணிக்கொடி எழுத்தாளர்களின் புதிய படைப்புகளும் இளைய படைப்பாளிகளின் விதம் விதமான சிறுகதைகளும், கவிதைகளும் மிகுதியாக வந்தன. பத்திரிகை வெற்றிகரமாக நடந்து கொண்டிருந்தது என்றே சொல்ல வேண்டும்.

முதல் வருட இறுதியில் ஆசிரியர் செய்த பிரகடனம் இது–

‘நாம் சந்தேகமின்றிக் கூற முடியும் பெரிய நாமதேயங்கள், பிரபலமான பெயர்கள் முதலிய சம்பிரதாய விருதுகளில்லாது, முழுதும் வாசகர்கள், எழுத்தாளர்கள் ஆகியவர்களுடைய பலத்தையே ஆதாரமாகக் கொண்டு வளர்ந்த ஒரே ஒரு தமிழ் மறுமலர்ச்சிப் பத்திரிகை கலா மோகினி.'

வி. ரா. ரா. வின் எழுத்துக்கள் நேர்மை, காம்பீர்யம், நையாண்டி, மெய்த்துணிவு ஆகிய பண்புகளைப் பெற்றிருந்தன. பூசி மெழுகாத வெட்டொன்று துண்டிரண்டு என்ற அபிப்பிராயங்கள் கலாமோகினி மூலம் ஒலிபரப்பப்பட்டன.

கவிஞர் பாரதிதாசனின் புகழ் மேலோங்கி வந்த காலம் அது. கலா மோகினி அவரிடம் கவிதை கேட்ட போது, அவர் தர மறுத்தார். பாரதிதாசன் படத்தை அட்டையில் வெளியிட்டு, உள்ளே அவரைப் பற்றிய தனது கருத்தை எடுப்பும் மிடுக்கும் அழகும் கலந்த நீண்ட கவிதையாகப் பிரசுரித்தார் வி.ரா.ரா.