பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

316

வல்லிக்கண்ணன்


இவர்களை உற்பத்தி செய்கிற பள்ளிக்கூடமா, கல்லூரியா, பல்கலைக்கழகமா, பெற்றோர்களா, சமூகச் சூழலா?

இந்தச் சிந்தனையின் பக்கம் வாசகர்களின் கவனத்தைத் திருப்பி, அவர்களைச் சிந்திக்கத் தூண்டியது. ‘விஞ்ஞான மேதைகள்—நிபுணர்கள் மாணவர்கள் பலர் பாமரமான இலக்கியம், இசை, சினிமா, நாடக, நடனங்களைத்தான் ரசிக்கிறார்களா? இது உண்மையா? உண்மையானால் காரணம் என்ன?’ என்று கேட்டு, விஞ்ஞானத்தையே தங்கள் வாழ்வின் முக்கிய சிந்தனை—தொழிலாகக் கொண்ட இளம் வாசகர்களிடம் அபிப்பிராயங்களை எழுதி அனுப்பும்படி கேட்டது.

இப்போது ‘ஸ்வச்சித் சிந்தனைகள்‘ என்ற இயக்கத்தில் கணையாழி மிகுந்த ஆர்வம் காட்டி வருகிறது.

‘நல்ல குடிமகனாக இருக்க விரும்பும் சிந்திக்கத் தெரிந்த தனி மனிதன், நால்வகைப் பிரச்னைகளின் விளிம்பில் வாழ்ந்து கொண்டு பெரும்பகுதி மக்கள் பசியிலும் அறியாமையிலும் பிணைபட்டுச் சமூகமே ஊழல் சக்தியாகச் சீரழிந்து வருவதைப் பார்த்துக்கொண்டு வாளாவிருக்க முடியாது.

நாட்டின் நால்வகைப் பிரச்னைகளும் தீரவேண்டுமென்றால், இப் பிரச்னைகளைத் தீர்க்கமுடியாமல் வளர்ந்து வரும் தற்போதைய அமைப்புகளை அடியோடு மாற்றி அமைக்க வேண்டும். ஊழலற்ற ஆட்சி, ஏழை— பணக்காரர் வித்தியாசமின்றி எல்லோருக்கும் சமவாய்ப்பு, நாட்டின் வளங்களைப் பயன்படுத்தி உற்பத்திகளைப் பெருக்கும் விதிமுறைகள், வாழ்க்கைக்குப் பயன்படும் கல்வி, சாதிசமய இன வேறுபாடுகள் ஒழிந்த ஒருமித்த சமூகம், சுத்தமான காற்று, குடிநீர், போதிய உணவு, குடியிருப்பு முதலான அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் திட்டம்—இவை எல்லாவற்றையும் நோக்கமாகக் கொண்ட ஒரு புதிய இயக்கம் தேவை.

முதல் கட்டமாக ஒரு சிந்தனை இயக்கத்தைத் துவக்கி, ஊழல், பசி, அறியாமை, பிணி இந்நால்வகை அசுரப் பிரச்னைகளை எதிர்த்து போராடுவோமாக அதற்காக, சிந்திக்கத் தெரிந்தவர்களின் அணியை ஒன்று திரட்டும் முயற்சிக்குக் கணையாழி தீவிர ஒத்துழைப்புத் தர முன்வந்திருக்கிறது.