பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

333


ரசனையின்மையை வைத்து லாபம் பண்ணத் தயாராக இருக்கிறார்கள். இலக்கியப் பத்திரிகைகள் படிக்க இந்தக் கால நிலையில் 200, 300 பேர்வழிகளாவது முன்வருகிறார்களே என்று மகிழ்ச்சியடையலாம் என்று கூடத் தோன்றுகிறது.

இந்த அதிகரிக்க வழி என்ன என்பதுதான் எனக்கும் தெரியவில்லை” என்றும் க. நா. சு. கூறியிருக்கிறார்.

இன்றுவரை இது யாருக்கும் தெரியவில்லைதான். இலக்கியப் பத்திரிகை நடத்துகிறவர்களுக்கும், இலக்கியத்தின் வளர்ச்சியில் நாட்டமும் ஈடுபாடும் கொள்கிற இலக்கியவாதிகள் யாருக்குமே தான் !

என்றாலும், ’தமிழ்ச் சிந்தனையை ஆழப்படுத்தும் நோக்கத்தோடும்’, தமிழ் இலக்கியத்தை வளம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடும், பொதுவாகப் புதுமைகள் பண்ணவேண்டும்— தங்கள் ஆற்றலை நிரூபிக்க வேண்டும் என்ற ஆசையோடும் அவ்வப்போது சிலர் சிறு பத்திரிகை வெளியீட்டு முயற்சியில் உற்சாகமாக ஈடுபட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

1980 களிலும் இந்த விதமான புதிய முயற்சிகளுக்குக் குறைவில்லை. லயம், இனி, புதுயுகம் பிறக்கிறது, மண், பாலம், எதிர்வு, பயணம், அஸ்வமேதா, நிஜம் என்று அநேகம். இவை ஒவ்வொன்றும் தனித்தன்மை காட்ட முயன்றதைப் பாராட்ட வேண்டும்.

இவையாவும் ஒரு சில இதழ்களே பிரசுரம் பெறும் வாய்ப்பினையே பெற்றிருந்தன. நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் விதைத்தபடி வெளிவந்த இச் சிற்றிதழ்கள் தங்களால் இயன்ற அளவு ஒளிவீச முயன்றுள்ளன என்பது பெருமைக்குரிய விஷயம்தான்.

இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையிலும் கால நிலையாலும்தான் சுந்தர ராமசாமி ’காலச்சுவடு’ என்ற காலாண்டிதழை ஆரம்பித்தார், 1988 ஜனவரியில், ’கனவுகளும் காரியங்களும்’ நிறைந்த உள்ளத்தோடு, தமிழ்ச் சிந்தனையை ஆழப்படுத்தும் நோக்கத்தை முதன்மையாகக் கொண்டு, படைப்பு, சமூக விமர்சனம், சரித்திரம், தத்துவம், கலைகள் ஆகிய துறைகளைச் சார்ந்த எழுத்துக்களை இயன்றவரை தரமாகத் தர முயலும் என்ற அறிவிப்புடன் ‘காலச்சுவடு’ தோன்றியது.

‘காலச்சுவடு’ இதழ் ஒவ்வொன்றும் ஒரு சிறப்பிதழே என்று கருதப்பட வேண்டிய விதத்தில் அமைந்திருந்தது. தோற்றத்திலும் உள்ளடக்கத்திலும் அது தனித்தன்மை காட்டியது. 1989 இறுதியில் அதன் எட்டாவது இதழ் பிரசுரமாயிற்று.

கவனிப்புக்கு உரிய மற்றொரு பத்திரிகை ’முன்றில்’. க. நா. சுப்ரமண்யத்தைச் சிறப்பாசிரியராகக் கொண்டு 1988 செப்டம்பரில், மாதப் பத்திரிகையாக முன்றில் பிறந்தது. க. நா. சு. எழுத்துக்களை அதிகம் பிரசுரித்து வந்தது. 1988 டிசம்பர் மாதம் க.நா.சு. நினைவு மலர் வெளியிட நேரிட்டது.

‘முன்றில்’ கால ஒழுங்கைக் கடைப்பிடிக்க முடியாத நிலையும் வந்தது. இருப்பினும் ஒவ்வொரு இதழும் தரமான தயாரிப்பாக இரு