பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

வல்லிக்கண்ணன்


என்ற புனைபெயரில் பிரசுரம் பெற்றது. கு. ப. ரா. கரிச்சான் என்ற பெயர்களிலும் எழுதினார்.

கும்பகோணத்தில் வசித்த தி. ஜானகிராமன், எம். வி. வெங்கட்ராம், ஆர். நாராயணசுவாமி ( ‘கரிச்சான் குஞ்சு' ), கி. ரா. கோபாலன், ஸ்வாமிநாத ஆத்ரேயன் மற்றும் சில நண்பர்களிடமிருந்தும் கதைகள் வாங்கி கு. ப. ரா. ஊழியனுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார்.

பொதுவாக, ஒவ்வொரு இதழையும் எடிட் செய்து- தேவைப்பட்ட கதைகள், கவிதைகள், கட்டுரைகள் முதலியவற்றைத் தேர்ந்தெடுத்து உருவாக்கியவர் திருலோக சீதாராம்தான்.

அவர் தகுந்த உதவி ஆசிரியர் ஒருவரைத் தேடிக் கொண்டிருந்தார். 1943 டிசம்பரில் சென்னை நவசக்தி மாதப் பத்திரிகை அலுவலகத்தில் என்னைக் கண்டார்.

1939-ல் எழுத ஆரம்பித்து, எழுத்தாளனாகவே வாழ்வது என்று தீர்மானித்து, பார்த்துக் கொண்டிருந்த சர்க்கார் விவசாய டிமான்ஸ்ட் ரேட்டர் ஆபீஸ் குமாஸ்தா வேலையை 1941- ல் துறந்துவிட்டு, எழுத்து உலகத்தில் முன்னேறுவதற்கு எனக்கு உதவக்கூடிய ஒரு பத்திரிகையை நான் தேடிக் கொண்டிருந்த காலம் அது.

1943-பிப்ரவரியில் புதுக்கோட்டை 'திருமகள்' என்ற பத்திரிகையில் முதலில் சேர்ந்தேன். ராசி. சிதம்பரம் என்பவர் நடத்திய பத்திரிகை. இராம. மருதப்பன் ஆசிரியர். தரமான சிறு பத்திரிகையாக வளர்ந்து வந்த அதை, 'கலாமோகினி' மாதிரி இலக்கிய மறுமலர்ச்சிப் பத்திரிகையாக மாற்ற வேண்டும் என்று அவர்கள் ஆசைப்பட்டார்கள். ‘கலா மோகினி' வி. ரா. ராஜகோபாலன் ஆலோசனையின்படி என்னை உதவி ஆசிரியராகச் சேர்த்தார்கள். ஆனால், பொருளாதார நிலை சீராக இருந்ததில்லை. பத்திரிகை சரியாக வராது என்று புரிந்ததும், நான் கோயம்புத்தூரிலிருந்து வெளிவந்து கொண்டிருந்த 'சினிமா உலகம்’ மாதமிருமுறை பத்திரிகையில் சேர்ந்தேன்.

அதில் துணை ஆசிரியர் ஆக ஒன்பது மாதங்கள் பணியாற்றிய பின், டிசம்பரில் சென்னை 'நவசக்தி'க்குப் போனேன்.

திரு. வி. கலியாணசுந்தர முதலியார் வாரப் பத்திரிகையாக நடத்தி வந்த 'நவசக்தி' யை “எனக்கு இரு மணிகள் கிடைத்தார்கள். ஒன்று சக்திதாசன் சுப்பிரமணி, இன்னொன்று ராதாமணி, அவர்கள் கண்மணி போல் நவசக்தியைப் போற்றி வளர்ப்பார்கள்” என்று குறிப்பிட்டு, இருவரிடமும் அளித்து விட்டார்.