பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

39


சக்திதாசன் கப்பிரமணியன் நவசக்தியை இலக்கிய மாசிகையாக நடத்தினார். கம்யூனிஸ்டுக் கட்சியைச் சேர்ந்த கே. ராமநாதன் துணை கிட்டியதும் நவசக்தி முற்போக்கு இலக்கிய மாதப் பத்திரிகை ஆயிற்று.

அந்த சந்தர்ப்பத்தில்தான் நான் 'நவசக்தி'யில் போய்ச் சேர்ந்தேன். அங்கே திருலோக சீதாராம் வந்திருந்தார், 'கிராம ஊழியன்' பொங்கல் மலருக்கு விஷயங்களும் விளம்பரங்களும் சேகரம் செய்வதற்காக, கூடவே என்னையும் அழைத்துப் போய்விட வேண்டும் என்று பெரிதும் விரும்பினார்.

எனினும், நான் அப்போது 'கிராம ஊழிய'னுக்குப் போகவில்லை.

1944 பிப்ரவரியில் சென்னைக்கு வந்த அ. வெ. ர. கி. என்னையும் துறையூருக்கு அழைத்துப் போனார். நான் கி. ஊ. உத விஆசிரியரானேன்.

‘கிராம ஊழியன்' கிரவுன் அளவில்- சிறிய வடிவத்தில்- வந்து கொண்டிருந்தது. கு. ப. ரா. மற்றும் கும்பகோணம் எழுத்தாளர்களோடு, ந.பிச்சமூர்த்தியும் கவிதை, கதை, மனநிழல் கட்டுரைகள் எழுதி வந்தார். கோபுலு, சாரதி ஆகிய ஓவியர்கள் அப்பொழுதுதான் பத்திரிகை உலகத்தில் பிரவேசித்திருந்தார்கள். கி. ஊ. அவர்களுக்குப் பெரிதும் உதவியது.

1944 மே மாதம் இதழிலிருந்து பத்திரிகையை டிம்மி சைஸில் -'ஆனந்த விகடன்' அளவில்- வெளியிடுவது என்று திட்டமாயிற்று.

எதிர்பாராத விதத்தில், கு. ப. ரா. ஏப்ரல் கடைசியில் மரணமடைந்தார்.

ஆகவே, 'கிராம ஊழியன்' வரலாற்றில் கு. ப. ராஜகோபாலன் பெயர் எட்டு மாதங்களுக்கு-நான்கு மாத காலம் கௌரவ ஆசிரியர் என்றும், நான்கு மாதங்கள் ஆசிரியர் என்றும்-இடம் பெற்றுள்ளது.

அக் காலத்தில், கு. ப. ரா. சில சிறுகதைகளும், 'பாமதி' போன்ற சில ஒற்றையங்க நாடகங்களும், சில கட்டுரைகளும் எழுதியுள்ளார். ந. பிச்சமூர்த்தியும் நிறைய எழுதியிருக்கிறார். தி. ஜானகிராமனின் முதல் நாவல் 'அமிர்தம்' தொடர் கதையாக வெளிவந்தது. புத்தக மதிப்புரை ‘நமது தராசு' என்ற தலைப்பில் பிரசுரமாயிற்று.

அந் நாட்களில் வெளிவந்து மிகுந்த கவனிப்புக்கும் பேச்சுக்கும் இலக்காகியிருந்த வி. ஸ். காண்டேகரின் 'கருகிய மொட்டு'