பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

வல்லிக்கண்ணன்


நாவலுக்கு கு. ப. ரா. எழுதிய விரிவான மதிப்புரை குறிப்பிடத்தகுந்தது.

திருலோக சீதாராம் 'மந்தஹாசன்' என்ற பெயரில் கவிதைகள் எழுதினார். கலைவாணன் (க. அப்புலிங்கம்) கவிதைகளும் வந்து கொண்டிருந்தன. -

டிம்மி சைலில் வெளியான முதலாவது இதழ் கு. ப. ரா. நினைவு மலராக அமைந்தது.

கு. ப. ராஜகோபாலன் ஆசிரியராக இருந்த காலத்தில், 1944 ஜனவரியில், 'கிராம ஊழியன்' பொங்கல் மலர் ஒன்றைப் பெரிய அளவில் தயாரித்து வெளியிட்டது. இலக்கியத் தரம் உள்ள சிறப்பு மலராக அமைந்திருந்த அதில்தான் புதுமைப்பித்தன் முதல் முதலாக வேளூர் வெ. கந்தசாமிக் கவிராயர் என்ற பெயரில் ஒரு கவிதை எழுதினார். ‘உண்டுண்டு கடவுளுக்குக் கண் உண்டு, கண்ணோ நெருப்பு வைக்க' என்று தொடங்கும் கவிதை அது. மற்றும் அந்நாளைய பிரபல எழுத்தாளர்களின் கதைகள், கட்டுரைகள் இடம் பெற்றிருந்தன. ந. பிச்ச மூர்த்தியின் நீண்ட கவிதை 'மழை அரசி காவியம்' மலருக்குத் தனிச் சிறப்பு அளித்தது.

கு. ப. ரா. வின் மறைவுக்குப் பிறகு, கிராம ஊழியன் போக்கில் இளமை வேகமும், துடிப்பும், துணிச்சலும் நையாண்டியும் சேர்ந்தன. கு. ப. ரா. வுக்காக எழுதிக்கொண்டிருந்த எழுத்தாளர்கள் ஊழியனுடன் ஒத்துழைக்க விரும்பவில்லை. ஆகவே நான் பலப்பல பெயர்களில் ஒவ்வொரு இதழிலும் அதிகம் எழுதவேண்டிய அவசியம் ஏற்பட்டது. திறமையுள்ள புதிய எழுத்தாளர்கள் ஊழியன் எழுத்தாளர்கள் ஆனார்கள். அசோகன், தி. க. சிவசங்கரன், ராசிபுரம் தனுஷ்கோடி, எஸ். சிதம்பரம் முதலியவர்கள் தொடர்ந்து எழுதினார்கள்.

கலைவாணன் (திருவானைக்காவல் க. அப்புலிங்கம்) ஓசை நயமும் இயல்பான ஓட்டமும், உணர்ச்சியும் உயிர்ப்பும் நிறைந்த கவிதைகள் எழுதி வந்தார்.

மணிக்கொடி எழுத்தாளர்களில், பிச்சமூர்த்தி, சிட்டி, எம். வி. வெங்கட்ராம் ஆகியோர் ஊழியனில் அதிகம் எழுதியுள்ளனர். எம். வி. வி. சில கதைகள் எழுதினார். சாத்சந்திரர் பெண்மையைப் போற்றி எழுதிய நீண்ட கட்டுரையை விக்கிரகவிதாசன் என்ற புனைபெயரில் எம். வி. வி. தமிழாக்கினார். அது தொடர்ந்து பிரசுரமாயிற்று.

உலகத்துச் சிறுகதைகளை என் அண்ணா அசோகன் (ரா. சு. கோமதிநாயகம்) 'மகாயன்' என்ற பெயரில் மொழிபெயர்த்துத் தந்தார்.