பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

49


‘குமரி மலர்' காட்டிய வழியில் தொடர்ந்து ஏகப்பட்ட மலர்கள் தமிழகத்தில் அந்நாட்களில் தோன்றின. தோன்றிய வேகத்திலேயே மறைந்தும் போயின. தமிழ் மலர், கதை மலர், கதைக் கொடி இப்படி ஏதேதோ பெயர்களில் பலப்பல வெளியீடுகள். அவற்றில் சில தரமான தயாரிப்புகளாகவும் அமைந்திருந்தன. எல்லாம் வழக்கமாக எழுதும் பெயர் பெற்ற எழுத்தாளர்களின் கதைகள், கட்டுரைகள், கவிதைகளை ஏற்றுப் பிரசுரிப்பதில் உற்சாகம் காட்டின. ஒரு சில நல்ல படைப்புகள் தோன்றுவதற்கு இவற்றில் சில உதவி புரிந்தன என்று கூறலாம்.

பெரும்பாலும் எல்லாப் பத்திரிகைகளும் 'மாதம் ஒரு வெளியீடு’ மலர்களும் சென்னையிலிருந்து வந்தன என்றாலும், நல்ல முறையில் நடந்த சில பத்திரிகைகள் தமிழ்நாட்டின் இதர நகரங்கள் சிலவற்றி லிருந்தும் வந்து கொண்டிருந்தன.

கும்பகோணத்திலிருந்து 'காவேரி' என்றொரு மாதப் பத்திரிகை, வாசகர்கள் விரும்பக் கூடிய விதத்தில், பல வருட காலம் பிரசுரமாயிற்று. இது 'கலைமகள்' வழியில் நடக்க முயன்றது என்று குறிப்பிடலாம். ஆனாலும், இலக்கியப் பிரக்ஞை எதையும் அது கொண்டிருந்ததில்லை. ஆகவே, சிறுகதைத் துறையில் அல்லது நாவல் துறையில் அல்லது எதிலுமே கணக்கில் கொள்ளத்தக்க விதத்தில் (எண்ணிப் பார்க்க வேண்டிய அளவுக்கு ) அந்தப் பத்திரிகை எதுவும் செய்ய இயலாமல் போய்விட்டது.

கோயம்புத்தூரிலிருந்து 'வசந்தம்' என்ற மாதப் பத்திரிகை பல வருட காலம் வந்தது. வாசகர்கள் விரும்பக் கூடிய ஒரு 'நல்ல பத்திரிகை' யாகத்தான் இதுவும் வளர்ந்தது. நாவலாசிரியர் ஆர். சண்முகசுந்தரத்தின் தம்பி ஆர். திருஞானசம்பந்தம் இதன் ஆசிரியர். பிரபல அரசியல்வாதி ஆர், கே. சண்முகம் செட்டியார், பிற்காலத்தில் பத்திரிகை நடத்தும் பொறுப்பை ஏற்று நிர்வகித்தார். விசேஷமான சாதனைகளோ சோதனைகளோ இந்தப் பத்திரிகையின் வாயிலாக நிகழ்த்தப்பட்டதில்லை. சரத் சந்திரரின் பெரிய நாவல்கள் ஆர். சண்முகசுந்தரத்தின் தமிழாக்கமாகத் தொடர்ந்து வந்து கொண்டிருந்தன. இதில்.

பம்பாயிலிருந்து ஒரு தமிழ்ப் பத்திரிகை அழகான- வசீகரமான அட்டைப் படங்களோடு வெளிவந்தது. 'விந்தியா' என்பது அதன் பெயர்.

1940 களில் பத்திரிகைத் துறையில் இலக்கிய உணர்வோடு செய்யப்-