பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

வல்லிக்கண்ணன்


பட்ட சில புதிய சோதனை முயற்சிகள் என்று குறிப்பிடப்பெற வேண்டியனவும் உண்டு.

க. நா. சு. புத்தகங்கள் பற்றி மதிப்புரையும் தகவல்களும் தருவதற்காக 'ராமபாணம்' என்றொரு சிறு வெளியீட்டைப் பிரசுரித்தார்.

ராமபாணம் என்பது புத்தகங்களில் துளைபோடும் ஒரு பூச்சியின் பெயர். புத்தகப்பூச்சி அல்லது புத்தகப் புழுவைக் குறிக்கும் இச் சொல்லையே க. நா. சு. தனது சூறாவளி பத்திரிகையில் புத்தக மதிப்புரைப் பகுதியின் தலைப்பாகப் பயன்படுத்தி வந்தார். பின்னர், புத்தக உலகச் செய்திகளையும் அபிப்பிராயங்களையும் கூறும் பிரசுரத்தின் பெயராக அதை வைத்தார். -

இவ் வெளியீடு சில இதழ்களே வந்தன.

சில வருஷங்களுக்குப் பிறகு. மறுமலர்ச்சி இலக்கியத்தில் புதுமை பண்ணும் நோக்கத்துடன் க. நா. சு. 'உஷா' என்றொரு சிறு பத்திரிகையை வெளியிட்டார். அது இரண்டே இரண்டு இதழ்கள்தான் வந்தன.

ரோமன் ரோலந்த் எழுதிய அற்புதமான மாபெரும் நாவல் 'ஜீன் கிறிஸ்தோவ்'. அதை க. நா. சு. தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் செய்ய ஆசைப்பட்டார். நாவல் மொழிபெயர்ப்பை ஒரேயடியாகப் புத்தகமாக வெளியிடுவதற்குப் பெரும்பணமும் மிக நிறையக் காகிதமும் தேவைப்படும் என்பதால் க. நா. சு. ஒரு புதிய திட்டம் வகுத்தார். ஒவ்வொரு வாரமும் பதினாறு பக்கங்கள் கொண்ட துண்டுப் பிரசுரமாக இரண்டனா விலையில் வெளியிடுவது நாவல் முழுவதையும் இந்த ரீதியில் பிரசுரிக்கலாம் என்று அவர் கருதினார். .

இந்த அடிப்படையில் 'ஜின் கிறிஸ்தோவ்' மொழிபெயர்ப்பு சில வாரங்கள் தொடர்ந்து வந்தது. பிறகு நின்றுவிட்டது.

உலக இலக்கியங்களின் அருமையான சிறுகதைகளை மொழி பெயர்த்து, எட்டனா விலையில் மாதம் ஒரு புத்தகமாக, அ. கி. ஜயராமன் பிரசுரித்தார். 'சர்வதேசக் கதை மலர்' வரிசையில் க. நா. சு. புதுமைப் பித்தன், தி. ஜானகிராமன் முதலியோர் மொழிபெயர்த்த நல்ல சிறு கதைகள் வெளிவந்தன. தமிழ் மட்டுமே படிக்கத் தெரிந்தவர்களும், ஆங்கிலப் புத்தகங்களைப் படிக்கும் வாய்ப்பைப் பெறாதவர்களும் இந்த ‘மலர்' களினால் நல்ல பலன் அடைந்தார்கள்.