பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8. சரஸ்வதி


தேசிய விடுதலைப் போராட்டம், சமூக சீர்திருத்த இயக்கம் இவற்றைச் சார்ந்து 1930 களில் மொழி மறுமலர்ச்சி வேகமும் ஏற்பட்டது முன்னரே கூறப்பட்டிருக்கிறது.

பாரதி காட்டிய பாதையில் முன்னேறி, தமிழ் இலக்கியத்தில் புது வளர்ச்சி கண்டு, மொழியை வளம் செய்ய முற்பட்டவர்கள் மறுமலர்ச்சி இலக்கியவாதிகள்.

1940 களின் பிற்பகுதியிலிருந்து, தமிழ் எழுத்தாளர்களிடையிலும் தமிழ்ப் பத்திரிகை உலகிலும் வேறு இரண்டு நோக்குகளும் போக்குகளும் வளரத் தொடங்கின.

ஒன்று 'திராவிட இயக்க' வளர்ச்சி, பார்ப்பனிய எதிர்ப்பு, பார்ப்பன ஆதிக்க ஒழிப்பு, வடவர் ஆதிக்க எதிர்ப்பு, கடவுள் மறுப்பு, மத ஒழிப்பு: மூடநம்பிக்கைகள், வறுமை, விபசாரம், பெண் அடிமைத்தனம் ஆகியவற்றின் ஒழிப்பு: இந்தி எதிர்ப்பு: தமிழ்-தமிழர் இன உயர்வு, சமூக சீர்திருத்தம் முதலியவற்றை அடிப்படைக் கொள்கைகளாகக் கொண்ட ‘திராவிட இயக்க' மனோபாவம் இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்தது.

இத்தகைய இன உணர்வுடன் தமிழில் பத்திரிகைகள் தோன்றியது பற்றி முன்பகுதியில் குறித்திருக்கிறேன்.

மற்றது, முற்போக்கு இலக்கிய நோக்கு இது 'வர்க்க உணர்வை’ வலியுறுத்தும் பொருளாதார தத்துவப் பார்வையை - மார்க்சியக் கண்ணோட்டத்தை- அடிப்படையாகக் கொண்டது. கம்யூனிஸத்தையும், கம்யூனிஸ்டுக் கொள்கைகளையும் சிலாகிப்பது, முதலாளித்துவ எதிர்ப்பு, முதலாளி வர்க்க ஒழிப்பு, பாட்டாளி வர்க்க உயர்வு, பொருளாதார சமத்துவம் முதலியவற்றை லட்சியமாகக் கொண்டது. .

இந்த நோக்கை கம்யூனிஸ்ட் கட்சிப் பத்திரிகைகள் 'ஜனசக்தி' ஆரம்பம் முதலே வலியுறுத்தி வந்தது. 'ஜனயுகம்', 'புதுமை இலக்கியம்' போன்ற சில பத்திரிகைகள் தோன்றி, சிறிது காலம் பணிபுரிந்து விட்டு மறைந்து போயின.