பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

வல்லிக்கண்ணன்


முற்போக்கு இலக்கிய மனோபாவம் தமிழ்நாட்டில் சிறிது சிறிதாகப் பரவி வந்தது. என்றாலும், முற்போக்கு இலக்கியப் பத்திரிகை என்று எதுவும் இல்லாமலிருந்தது.

அதனால், வ. விஜயபாஸ்கரன் அப்படி ஒரு இலக்கியப் பத்திரிகை தொடங்க முன்வந்தார்.

பத்திரிகைத் துறையில் நல்ல அனுபவம் பெற்றவர் அவர். 1950-51 -ல் அவரே 'விடி வெள்ளி' என்ற பத்திரிகையை நடத்தி, நிறுத்தியிருந்தார். அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்னைகளை அலசி ஆராய்ந்த வாரப் பத்திரிகை அது. .

பிறகு, அவர் 'ஹனுமான்' வாரப் பத்திரிகையின் கடைசி கால ஆசிரியராகப் பணிபுரிந்தார். அத்துடன் ‘சக்தி' யின் துணை ஆசிரியராகவும் பொறுப்பு வகித்து அனுபவம் கண்டவர். -

இருப்பினும், விஜயபாஸ்கரன் துணிந்து ஒரு இலக்கியப் பத்திரிகை நடத்த முன்வந்தார். 1955 மே மாதம் ‘சரஸ்வதி' யின் முதல் இதழ் வந்தது.

கம்யூனிஸ்ட் ஆன விஜயபாஸ்கரன் நடத்துவதால் கம்யூனிஸ்ட் பத்திரிகை என்ற பெயர் புதிய பத்திரிகைக்கு ஏற்பட்டு விடக்கூடாது; அரசியல் நிறம் கொஞ்சமும் தெரியாத கலை இலக்கியப் பத்திரிகைதான் என்பது தெளிவாகத் தெரியும்படியான- 'கலைமகள்' போன்ற ஒரு பெயராக இருக்க வேண்டும் என்று அவர் கருதினார். இந்திய முற்போக்கு எழுத்தாளர்களின் முதல்வரும் முன்னோடியுமான பிரேம்சந்த் நடத்திய 'சரஸ்வதி' யின் பெயரையே அவர் தனது பத்திரிகைக்கும் தேர்ந்தெடுத்தார். மேலும், அது அவருடைய மனைவியின் பெயராகவும் இருந்தது.

மேலை நாட்டில் வளர்ந்து வரும் புத்தம் புதிய கருத்துக்களைத் திரட்டித் தமிழர்களுக்குத் தருவது, மறைந்து வரும் நமது கலைச் செல்வங்களைத் தேடி எடுத்து வெளியிடுவது, தமிழில் சிறந்த சிறுகதைகள், கவிதைகள் வெளிவருவதற்கு ஆவன செய்வது- இவை 'சரஸ்வதி' ஆசிரியரின் நோக்கங்களாக இருந்தன.

பாராட்டத்தகுந்த வகையில் 'சரஸ்வதி' இவற்றை நிறைவேற்றவும் செய்தது.

அயல்நாட்டுச் சிறுகதைகளின் தமிழாக்கம், சிறந்த உலக நாவல்கள் பலவற்றின் சுருக்கம், சுயமாக எழுதப்பெற்ற அருமையான