பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

73


ஓவியம் போன்ற கலைகள் பற்றியும் கட்டுரைகள் பிரசுரமாயின.

'நடை' புத்தக வடிவத்தில், 'ஆனந்த விகடன்' அளவில், கனத்த அட்டையுடன் தயாரிக்கப்பட்டது. எட்டு இதழ்கள்தான் ( இரண்டு வருடங்கள்) வெளிவந்தன.

ஐராவதம், ஞானக்கூத்தன் போன்ற புதியவர்களும், அசோகமித்திரன், நகுலன், நீல. பத்மநாபன், மா. தக்ஷிணாமூர்த்தி, கோ. ராஜாராம் ஆகியோரும் நடையில் எழுதினார்கள்.

அதன் காலத்தில் அது இலக்கியத்தையோ எழுத்தாளர்களையோ பாதிக்கும்படியான சாதனைகள் எதையும் புரிந்துவிடவில்லை. தரமான ஒரு பத்திரிகையாக நடை விளங்கியது.

திரைப்படப் பாடல்களின் இலக்கியத் தன்மை குறித்து, சிந்தனையைத் தூண்டக்கூடிய நல்ல கட்டுரை ஒன்றையும் நடை வெளியிட்டுள்ளது. அதன் இரண்டு வருட வாழ்வில் நடை புதுக் கவிதைக்குச் சிறப்பான பணியாற்றியிருப்பது குறிப்பிடத்தகுந்தது.

‘எழுத்து', அதன் ஆசிரியருக்குப் பெரும் தொகை நஷ்டம் ஏற்படுத்திய போதிலும், இலக்கிய வரலாற்றில் நிரந்தரமான ஒரு முக்கிய இடத்தைப் பெற்றுள்ளது. அதன் மதிப்பை இலக்கிய மாணவர்களும், ஆய்வாளர்களும் பிற்காலத்தில் உணரலானார்கள். 'எழுத்து' போன்ற ஒரு பத்திரிகை தேவை என்ற உணர்ச்சியைப் பின்வந்த தலைமுறையினரிடம் உண்டாக்கிவிட்டிருப்பது, 'எழுத்து' க்கு மாபெரும் வெற்றி ஆகும்.