பக்கம்:தமிழில் சிறு பத்திரிகைகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழில் சிறு பத்திரிகைகள்

77


கட்டுரைகள், மொழிபெயர்ப்புக் கவிதைகள் இப்படிப் பலவற்றையும் கசட தபற தந்திருக்கிறது.

‘கசடதபற' வைச் சேர்ந்தவர்களைத் தவிர, நகுலன், ஆர். இராஜேந்திரசோழன், பாலகுமாரன், கல்யாண்ஜி, இந்திரா பார்த்தசாரதி முதலியோரும் கதைகள் எழுதியிருக்கிறார்கள்.

கி. அ. சச்சிதானந்தம், வெ. சாமிநாதன், தர்மு அரூப் சிவராம், எஸ். கோபாலி போன்றவர்கள் கட்டுரைகள் எழுதியுள்ளனர். க. நா. சுப்பிரமணியம் சில கவிதைகள், கதை- கட்டுரைகள் எழுதியிருக்கிறார்.

ஓவியர்கள் கே. எம். ஆதிமூலம், பாஸ்கரன், பி. கிருஷ்ணமூர்த்தி, கே. தாமோதரன், டி. கே. பத்மினி, எஸ். வைதீஸ்வரன், சிதம்பரகிருஷ்ணன் முதலியவர்களது சித்திரங்களை கசடதபற பிரசுரித்தது. ஓவியம் பற்றிய கட்டுரைகளும் அவ்வப்போது வெளியாயின.

கசடதபற கவிதைக்கு நிறையவே பணியாற்றியுள்ளது. ஞானக்கூத்தன், பாலகுமாரன், கோ. ராஜாராம், எஸ். வைதீஸ்வரன், கலாப்ரியா, சச்சிதானந்தம், தருமு சிவராம், நீலமணி, கல்யாண்ஜி, ஆத்மாநாம், நா. ஜெயராமன், மகாகணபதி மற்றும் பலர் கவிதைகள் எழுதியுள்ளனர்.

புதுக்கவிதை பற்றிய சார்வாகன் கட்டுரை விசேஷமாகக் குறிப்பிடத் தகுந்தது.

நோபல் பரிசு பெற்ற ரஷ்ய எழுத்தாளர் ஸோல்ஸனிட்ஸினின் நோபல் உரை (14 பக்கங்கள் ) 26-ம் இதழ், நவம்பர் 1972, ஸோல்ஸெனிட்ஸின் ஒரு பரிசீலனை ( எஸ். வி. ராஜதுரை ), ஜீன் பால்சார்த்தருடன் ஒரு பேட்டி மற்றும் கான்ஸர் வார்டு (ராஜதுரை ) புனிதஜெனே (தர்மு அரூப் சிவராம் ) ஆகிய கட்டுரைகளும் முக்கியமானவை.

‘கசடதபற'வின் 17-18வது இதழ் (1972 மார்ச்- ஏப்ரல் ஒரே இதழ்) க. நா. சு. சிறப்பிதழாக வந்தது. க. நா. சு. பற்றிய பல கட்டுரைகளுடன் க. நா. சு. வின் படைப்புகளும் அதில் இடம் பெற்றன.

13-வது இதழ் நாடகச் சிறப்பிதழாக வந்தது. இந்திரா பார்த்தசாரதியின் நாடகம் 'மழை' முழுமையாக அதில் பிரசுரமாயிற்று.

இந்த இதழிலிருந்து பத்திரிகையின் அளவும் மாறுதல் பெற்றது. சற்றே சுருங்கிய வடிவில் ( ‘கணையாழி' சைஸ்) வெளிவரலாயிற்று.