பக்கம்:தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தமிழில் சிறுகதைகள்

தமிழிற் சிறுகதை இலக்கியக்கலை என்பது கடந்த முப்பது ஆண்டுகளாகத்தான் வளர்ந்து வருகிறதென்றாலும், அதற்கு வேண்டிய கரு முன்னைநாள் தொட்டு உண்டு எனலாம். தொல்காப்பியத்தில் "பொருளொடு புணர்ந்த நகை மொழி” எனக் குறிப்பிடப்பட்டிருக்கும் ஓர் உரைநடை வகை சிறுகதைக்கு வேண்டிய அடிப்படையைக் கோலியிருப்பதாகக் கொள்ளலாம். கலித்தொகை, நற்றிணை, அகநானூறு முதலிய சங்கச் செய்யுட்களிற் சில ஒரே ஒரு நிகழ்ச்சியை அழகான முறையிற் படம் பிடித்துக் காட்டுகின்றன. ஆனாலும், அவை வசனத்தில் இல்லாதபடியால் அவற்றைச் சிறுகதைகள்' என்று சிறப்பித்துக் கூறமுடியாது. பஞ்சதந்திரக் கதைகள், விக்கிரமாதித்தியன் கதைகள், மதன காமராஜன் கதைகள், அரபி இரவுக் கதைகள், தெனாலி ராமன் கதைகள் முதலியன தமிழில் வழங்கினாலும், அவை கதைகளே ஒழியச் சிறுகதை இலக்கணத்திற்குப் பொருந்தியவை ஆகமாட்டா. வீரமாமுனிவர், பரமார்த்த குரு கதை’, அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார் இயற்றிய 'விநோத ரச மஞ்சரி ' ஆகியவற்றிற் கற்பனைக் கதைகளைக் காண்கிறோமே அன்றிச் சிறுகதைகளை அல்ல.


1921 வரை வாழ்ந்த சுப்பிரமணிய பாரதியார்தான் சிறுகதை எழுத்தாளர்களுக்கு விடி வெள்ளியாய் இருந்தவர் என்று கூறலாம். அவர் இயற்றிய ’திண்டிம சாஸ்திரி’ ”கவர்ணகுமாரி” போன்றவற்றின் அடிப்படையில், பின்னர்ச்