பக்கம்:தமிழ்ச் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிறுகதை இலக்கியம் 7


அடுத்த தெருவிலோ ஊரிலோ உள்ள எலும்பும் தோலும் சதையும் கூடிய உண்மை ஆட்களேபோல நமக்குத் தோற்றும்படி படைக்கப்படும் பாத்திரங்கள் நம்மிடத்து அன்பு உணர்ச்சியையோ வெறுப்பு உணர்ச்சியையோ கட்டாயம் எழுப்பிவிடுதல் உண்டு என்பதில் ஐயமில்லை. பாத்திரங்களைப்பற்றி எழுதுகின்ற முறையும் இரண்டு வகைப்படும். ஒரு வகையில் கதையாசிரியரே பேசுவார். மற்றொரு வகையில் பாத்திரங்கள் தம்முள் பேசிக்கொள்ளுகின்ற வகையினால், அவர்கள் இயல்பு புலப்படுத்தப்படுவதோடன்றிக் கதையும் தொடர்ந்து நிகழ்ந்துவிடும். இரண்டாவது கூறப்பட்ட முறைப்படி எழுதுவது முன்னைய முறையைவிடச் சிறந்தது என்று மேலைநாட்டார் நம்புகின்றார்கள்.

நடை

    சிறுகதையின் நடை எவ்வாறு இருத்தல் வேண்டும்? அது தெளிவாகவும், எளிதாகவும் பாத்திரங்கள் பேசுவது போலவும் இருத்தல்வேண்டும். உரையாடல்கள் ஒருவித விறுவிறுப்பு உடையனவாகவும். இயற்கையை ஒட்டியனவாகவும், நாடகம்போல் தோற்றுவனவாகவும் இருத்தல் நல்லது. இதனால் அந்தந்தப் பாத்திரங்கள் பேசுமாறு போலவே கட்டாயம் அமைக்கவேண்டும் என்பது இல்லை. சிலவேளைகளில் பாத்திரங்களின் பேச்சுக்களை எடுத்துக் கொண்டு, புதுப்பித்துப் பதிப்பிப்பவரும் உண்டு. ஒவ்வோர் எழுத்தும் பாத்திரத்தின் பேச்சு நிலையில் நின்று மாறுபடாமல் இருக்கவேண்டும் என்பது நியதியில்லை. மாறுபட்டாலும் மாறுபடவில்லை என்ற ஒரு பொது உணர்ச்சியை எழுப்பக்கூடிய வகையில் பேச்சுக்களைச் சிறிது மாற்றியோ கூட்டியோ திருத்தியோ அமைத்தல் தவறாகமாட்டாது. இந்த முறையையும் சிலர் கைக்கொண்டு வெற்றி பெறுகின்றனர். சிறுகதையில் உரையாடல் இருப்பது விரும்பத்தக்கது என்றாலும், இருக்கவேண்டும் என்பது கட்டாயமில்லை. சிலருடைய சிறுகதை உரையாடலே இல்லாமல் நிகழ்தல் கூடும்; சிலருடையச் சிறுகதையிற் சிறிதளவு உரை