பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

10

உவமைக்கவிஞர் சுரதா


மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றை) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளது. 42 இதழ்களையும் தெரிந்து கொள்ளலாம். அவரது ஆர்வ முயற்சிக்கு நூல் வடிவம் தந்துள்ளோம். சொல்லடைவுகளைக் கொண்டு சொற்களைத் தேடிப் படித்தறியலாம்.

கவிதை படைக்கும் கற்பனையுள்ளம் கலைச்சொல் தேடியுள்ளது; புதுச்சொல் கண்டு பூரித்துப் பொற்குவியலாய்த் திரட்டிக் காத்து, அதன் பிறப்பையும் காலத்தையும் நாம் அறிய வழங்குகிறது.

இத்தொண்டு தக்கது. தனித்தது. இனிப்பது உயர்ந்தது.

அவர் உள்ளத்தில் கொந்தளித்துக் கிடக்கும் கவிதைகளும் காப்பியங்களும் எழுத்துருவில் முழுமையாகத் தராவிடினும் கருதத்தக்க, மொழி வளர்ச்சிக்குரிய தமிழாக்கச் சொற்களைத் தொகுத்தளித்திருக்கும் தொண்டு தனிச் சிறப்புடையது. தேவைப்படும் தமிழ்த்தொண்டு.

தமிழாக்கச் சொற்களை எழுதியோர் - எழுதப்பெற்ற நூல்கள் பற்றிய பட்டியலும், தமிழாக்கச் சொற்களின் அகர வரிசைப் பட்டியலும் பின் இணைப்பாகத் தரப்பெற்றுள்ளது. வாசிப்போர் பார்த்துப் பயனடைய வேண்டுகிறோம்.

மொழி வளர்ச்சிக்கும் பேராசிரியர்களுக்கும் உதவும் பெருந்தொண்டு.

தமிழ்க் கல்வியுலகம் கவிஞரைப் பாராட்டும் என்பது உறுதி. எமது நிலையம் இதனை வெளியிட, விரும்பி அளித்த உவமைக் கவிஞருக்கு எமது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

1965 ஏப்ரல் 14ஆம் நாள் கவிஞரின் கவிதைத் தொகுப்பைத் தேன் மழை எனும் பெயரில் வெளியிட்டோம். அதையடுத்து, கவிதைத் தலைவர் நேரு எனும் 16 பக்கமுள்ள அரிய கவிதைப் புத்தகம் ஒன்றை அழகுற வெளியிட்டோம். 38 ஆண்டுகளுக்குப் பின் மொழியாக்கச் சொற்களின் தொகுப்பை 2003இல் வெளியிட்டு மகிழ்கிறோம். தமிழுலகம் பயன்பெறும் என நம்புகிறோம்.

அன்பன்
வெள்ளையாம்பட்டு சுந்தரம்