பக்கம்:தமிழ்ச் சொல்லாக்கம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6

உவமைக்கவிஞர் சுரதா



ஒரு துறை சார்ந்த பல சொற்களை ஆங்காங்கே காட்டியிருப்பதும் நன்று. (ப. 42, 118, 142)

பழந்தமிழ் அறிஞர்களான தொழுவூர் வேலாயுத முதலியார்; பாம்பன் சுவாமிகள், திருமணம் செல்வ கேசவ முதலியார், திரு.வி.க., பரிதிமாற் கலைஞர், கா. நமசிவாய முதலியார் முதலான பலர் சொற்பொருளைத் தந்திருக்கும் பாங்கை இந்நூல் விளக்கும்போது அவர்களின் மொழிநடை இயல்பையும் அறிந்து இன்புறுகிறோம்.

மொழி வளர்ச்சியில் பழமைக்கும் இடம் உண்டு; புதுமைக்கும் வரவேற்பு உண்டு. பழையன கழிவதும், புதுமையை ஏற்பதும் மொழியின் இயல்பு. இக்கருத்தைக் கூறும் நூற்பாவில் உள்ள ‘காலவகை‘ என்ற சொல்கூட ஒரு வகையில் மொழியாக்கச் சொல்லே! இன்றைக்கு Fashion என்றழைக்கப்படும் ஆங்கிலச் சொல்லுக்கு ஏற்ற சொல்லாக அது உள்ளது.

அதேபோல் இன்று வழங்கப்படும் பிற சொற்களுக்குப் பழைய நூல்களிலிருந்தும் 'இணை' அல்லது சமன் சொற்களைத் தேடலாம். சான்றாகக் கூற வேண்டுமானால், Himalayan Blunder என்ற மரபுத் தொடரை ‘வான்பிழை‘ எனக் கம்பன் கூறிய சொற்களில் பொருத்திக் காட்ட வாய்ப்புண்டு. இது தனியோர் ஆராய்ச்சி. விரிப்பிற் பெருகும்; தொகுப்பின் எஞ்சும்.

இந்நூலைத் தொகுத்த கவிஞர் சுரதாவிற்குத் ‘தமிழகம்’ நன்றிக் கடன் செலுத்தவேண்டும். அவரைத் தக்கவாறு பயன்படுத்திக் கொள்ளவேண்டும். படைப்புத் துறைமுகத்திலிருந்து அவர் ஒதுங்கிக் கொண்டாலும், படித்தறிந்த நூல்களின் தேன்மழையில் நம்மைத் திளைக்க வைத்துள்ளார். இது போன்ற தகவல்களின் தமிழ்ச் சுரங்கம் அவர். அக்கவிச்சுரங்கத்தில் இருந்து கவிதைகளைவிட இனி, கனிமங்களை வெட்டி எடுக்கலாம்.

இந்நூலைக் கவிஞர்க்கு ஒரு காணிக்கையாக அளித்துள்ளார் வரலாற்றறிவும், தமிழறிவும் பதிப்புக்கலையும் அறிந்த திரு வெள்ளையாம்பட்டு சுந்தரம் அவர்கள். இதற்காக அவரைப் போற்றவேண்டும்.

இந்நூலை அழகிய முறையில் வெளிக் கொணர்ந்திருக்கும் சேகர் பதிப்பகத்தார்க்கு என் பாராட்டுக்கள் பல.