பக்கம்:தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தமிழ்த் தாத்தா

13

இவருக்குச் சில நூல்களைப் பாடம் சொன்னார். அந்த இளம் பருவத்திலேயே செய்யுள் இயற்றும் பயிற்சி இவருக்கு ஏற்பட்டது.

இளம் பருவத்திலேயே திருமணம் செய்து வைப்பது அந்தக்கால வழக்கமாதலின், இவருக்குத் தக்க இடத்தில் திருமணம் செய்து வைக்க வேண்டுமென்ற கவலை இவருடைய தந்தையாருக்கு உண்டாயிற்று. 16—6—1868-ஆம் நாளன்று இவருக்கும் மதுராம்பாள் என்ற பெண்மணிக்கும் திருமணம் நடந்தது.

செங்கணம் சின்னப்பண்ணை விருத்தாசல ரெட்டியார் என்பவர் யாப்பருங்கலக்காரிகையை நன்றாகப் படித்தவர். அவரிடம் இவர் பாடம் கேட்டார். ரெட்டியார் பாடம் சொல்லும் போது பல புலவர்களைப் பற்றிய செய்திகளைச் சொல்வார். அக்காலத்தில் திருவாவடுதுறை ஆதீன வித்துவானாக இருந்து, அக்காலக் கம்பர் என்று எல்லோராலும் போற்றப்பெற்ற மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களின் புகழ் எங்கும் பரவியிருந்தது. விருத்தாசல ரெட்டியார், அவர் பெருமையைப் பற்றி அடிக்கடி பேசுவார். அதனைக் கேட்கக் கேட்க இவருக்கு, “அந்தப் பெருமானிடம் போய்ப் பாடம் கேட்கும் வாய்ப்பு வருமா? இறைவன் திருவருள் அதைக் கூட்டி வைக்குமோ?” என்று எண்ணினார். பல பல இடங்களில் சில சில நூல்களைக் கேட்டும் இவருக்குத் தமிழ்ப் பசி தீரவில்லை. அது மேலும் மேலும் வளர்ந்து வந்தது. இவருடைய பெரும் பசியைப் போக்குவதற்குரியவர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களே என்று சிலர் எடுத்துச் சொன்னார்கள். எப்படியாவது அவரிடம் போய்ப் பயின்றால், இவர் நன்றாகக் கற்று முன்னுக்கு வரலாம் என்று பலரும் சொன்னதைக் கேட்டு, இவருடைய தந்தையாருக்கும் இவரைப் பிள்ளையவர்களிடத்தில் கொண்டுபோய்ச் சேர்ப்பது அவசியம் என்ற எண்ணம் உண்டாயிற்று. பிள்ளையவர்கள் அப்போது மாயூரத்தில் இருந்ததனால், இவர் மாயூரத்தில் போய்ப் படிக்க வேண்டுமே! அதற்கு வேண்டிய வசதிகளுக்கு என்ன செய்வது?" என்று எண்ணிக் கவலை கொண்டார். ஆனால் இறைவன் திருவருள் செய்வான் என்ற தைரியம் இருந்தது. எப்படியாவது பிள்ளையவர்களிடம் இவனைச் சேர்த்துவிட்டால் மேலும் மேலும் முன்னுக்கு வருவான். தமிழ்க் கல்வியில் சிறந்த புலவனாகலாம் என்ற நம்பிக்கை மாத்திரம் இருந்தது. ஆகவே, எப்படியாவது மாயூரத்திற்குப் போகலாம் என்று முடிவு செய்தார். அப்போது கோபாலகிருஷ்ண பாரதியார் மாயூரத்தில் வாழ்ந்து வந்தார். தமிழ் இலக்கியத்தைப் படிப்பதோடு பாரதியாரிடம் இசையையும் பயிலச் சொல்லலாம் என்ற விருப்பம் தந்தையாருக்கு இருந்தது. ஆகவே, எப்படியாவது மாயூரத்திற்குப் போய்ச் சேருவது என்ற தீர்மானம் செய்தார்.