பக்கம்:தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.pdf/3

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர் (1855–1942) தமிழுக்காகவே வாழ்ந்தவர். அறுபதாண்டு காலத்துக்கு மேல் தமிழ்க் கல்வி ஆசிரியராகப் பணி ஆற்றியபடியே, பழந்தமிழ் நூல்களை ஆராய்ந்து வெளியிட்டு, தமிழ்க் கல்வியின் எல்லையை விரிவாக்கி, பழந்தமிழ் இலக்கியங்களையும் உயர் காப்பியங்களையும் காலத்தின் அழிவினின்றும் மீட்டுத் தந்தவர். பழந்தமிழர் வாழ்க்கை உயர்வை இலக்கியச் செய்திகள் வாயிலாக உணர்த்தியவர். இலக்கியப் பதிப்புத்துறையில் பாடுபட்டு ஏடு தேடிய இவரது உழைப்பின் பயனாக புது ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன. வரலாற்றுச் செய்திகளைச் சுவையான நவீன சிறுகதை போலச் சொல்ல வல்லவர். வாழ்க்கை வரலாற்றுத் துறையில் தமிழிலே ஒரு வழிகாட்டி இவர். இன்றைய தமிழர் சிந்தனைக் கருத்துக்களையும் தமிழ் எழுத்தாளர் நடையையும் ஐயரவர்கள் வெளியீடுகள் பெரிதும் பாதித்துள்ளன எனலாம்.

இளமையில் நீண்ட காலம் ஐயரவர்களுடன் முக்கிய மாணவராக இருந்து பழகிய நூலாசிரியர் கி. வா. ஜகந்நாதன் பண்டைத் தமிழ்க் கல்வியிலும் சிறந்தவர்; இன்றைய முன்னணி எழுத்தாளர் வரிசையிலும் மதிக்கப்பெறும் ஆசிரியர். ஐயரவர்களின் சிறந்த வாழ்வையும் உயர்ந்த தமிழ்ப் பணியையும் இந்த நூலில் தெளிவாக உணர்த்துகின்றார்.

 


அட்டை அமைப்பு: சத்தியஜித் ராய்


உருவப் படம் : மகாமகோபாத்தியாய

டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர் நூலகம்
வழங்கிய புகைப் படத்தின் கோட்டுருவம்.


விலை :ரூ. 4.