பக்கம்:தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

40

தமிழ்த் தாத்தா


ஆசிரியர் பழைய காஞ்சிப்புராணக் கடிதப் பிரதி ஒன்றை அவரிடம் வழங்கினர். ஏதோ புதையல் கிடைத்ததைப்போல அதைப் பெற்றுக்கொண்ட பிரெஞ்சுக்காரர் ஆசிரியரிடம் விடை பெற்றுச்சென்றார். தாம் சொன்னதுபோலவே இரண்டு வாரத்தில் அதை ரிஜிஸ்தர் தபாலில் திரும்ப அனுப்பி வைத்தார்.

அந்தப் பிரெஞ்சுக்காரர் தஞ்சையில் இருந்தபோது அங்கிருந்த சப்கலெக்டரிடம் ஆசிரியப் பெருமானின் உழைப்பையும், அவரது விரிந்த புலமையையும், அவர் பதிப்பித்த நூல்களால் தமிழுக்கு உண்டான ஏற்றத்தையும் எடுத்துச் சொல்லியிருக்கிறார். ஏட்டுச்சுவடியில் உள்ளதை ஆராய்ந்து,பதிப்பிப்பது என்பது மிகவும் அருமையான காரியம் என்பதையும் அவர் நன்றாக விளக்கியிருக்கிறார். அதன் பயனாக ஆசிரியப் பெருமானுக்கு ஒரு நன்மை கிடைத்தது. 1903-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் தேதி அன்று ஏழாவது எட்வர்டு மன்னர் பட்டாபிஷேகக் கொண்டாட்டம் நடந்தது. தஞ்சைமாநகரில் ஒரு மகாசபையைக் கூட்டி ஒரு விழா நடத்தினார்கள். அந்த விழாவுக்கு ஆசிரியரை வரவேண்டுமென்று அழைத்தார்கள். அவர்களது வேண்டுகோளின்படி ஆசிரியர் அங்குப் போய்வந்தார். அப்போது ஆசிரியப் பெருமானின் தமிழ்த் தொண்டைப் பாராட்டி சப்கலெக்டர் ஒரு பாராட்டுத் தாளை அளித்தார்.


ஐங்குறுநூறு வெளிவரல்

சங்க நூல்களில் ஒன்றாகிய ஐங்குறுநூற்றை ஆராய்ந்து அதற்கு வேண்டிய குறிப்புகளே ஆசிரியர் தொகுத்துக்கொண்டிருந்தார். யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு கடிதம் வந்தது. நூலை மிகவும் பெருக்காமல், சுருக்கமாக வெளியிட்டால் பல நூல்களைத் தாங்கள் சீக்கிரத்தில் வெளியிடலாம் என்று ஓர் அன்பர் எழுதியிருந்தார். அதை நினைவில் வைத்துக்கொண்டு ஐங்குறுநூற்றைச் சுருக்கமான முறையில் 1902-ஆம் வருஷம் செப்டெம்பர் மாதம் ஆசிரியர் வெளியிட்டார்.

அது வெளிவந்த பிறகு அந்த யாழ்ப்பாணத்து அன்பர், "இப்படி எல்லாவற்றையும் சுருக்கிக்கொள்வீர்கள் என்று நான் நினைக்கவில்லை. தங்களிடமிருந்து பெற்றிருக்க வேண்டிய பெரும் பயனைத் தமிழ்நாடு இழந்துவிட்டது. அதற்காக நான் மிகவும் வருந்துகிறேன்" என்று ஒரு கடிதம் எழுதினார்.

1903-ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஐங்குறுநூற்றின் முதல் பதிப்பு வெளியாயிற்று. அதைத் தமக்கு வேலை வாங்கித் தந்த தியாகராஜ செட்டியாருக்கு உரிமையாக்கினர் இவர்.