பக்கம்:தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ்த் தாத்தா

51

குறிப்பு இருந்தது. சிறையிலிருந்து யார் எழுதியிருப்பார்கள் என்று எண்ணி ஆசிரியர் அதைப் பிரித்துப் பார்த்தார்.

கப்பலோட்டிய தமிழராகிய வ. உ. சிதம்பரம் பிள்ளை கோயம்புத்தூர்ச் சிறையில் அப்போது இருந்தார். அவரே அந்தக் கடிதத்தை 14-9-1908-ஆம் தேதி எழுதியிருந்தார். அவர் திருக்குறளைச் சிறையில் ஆராய்ச்சி செய்துவந்தார். தாம் திருக்குறள் ஆராய்ச்சி செய்து வருவது பற்றியும், அதை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து வருவது பற்றியும் குறித்திருந்தார். அதில் தமக்கு ஏற்பட்டுள்ள ஐயங்கள் சிலவற்றை எழுதி அவற்றை விளக்கவேண்டு மென்று கேட்டிருந்தார். ஆசிரியப் பெருமானும் தக்க விடைகளை எழுதி அனுப்பினார்.


அச்சகம் வாங்க விரும்பாமை

ஆசிரியர் புத்தகங்களை அச்சிடுவதற்குப் பல அச்சகங்களை நம்பித் தொல்லைப்பட்டு வருவதை அறிந்து திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் அம்பலவாண தேசிகர் அந்த வகையில் ஆசிரியருக்கு ஏதாவது உதவி புரியவேண்டுமென்று நினைத்தார். ஆசிரியப் பெருமானே சொந்தத்தில் ஓர் அச்சகத்தை வைத்துக் கொண்டால் நலமாக இருக்கும் என்று எண்ணினார்.

ஒருமுறை திருவாவடுதுறைக்கு ஆசிரியர் சென்றிருந்தார்: "பிற அச்சகங்களை நம்பிப் புத்தகங்களைக் கொடுத்துத் தொல்லைப் படுகிறீர்கள். நீங்களே ஓர் அச்சகத்தை வைத்துக்கொண்டால் புத்தகங்களை வெளியிடுவதற்கு உதவியாக இருக்கும். ஐயாயிரம் ரூபாயை நாம் உங்களுக்குத் தருகிறோம். அதை வைத்துக்கொண்டு அச்சகத்தை ஆரம்பித்தால் விரைவில் பல நூல்களை நீங்கள் வெளியிடலாம்" என்றார்.

ஆசிரியர் உடனே பதில் சொல்லவில்லை. "நாளைக்குப் பதில் சொல்கிறேன்" என்று வந்துவிட்டார். மறுநாள் சென்றபோது, "சந்நிதானத்திற்கு என்னிடம் இருக்கும் பேரன்பை நான் உணர்கிறேன். வெளி அச்சகத்தை நம்பி நூல்களை வெளியிடுவதில் பல தொல்லைகளுக்கு நான் ஆளாகிறேன் என்பது உண்மைதான். ஆனால் இப்போது புத்தகத்திற்கு வேண்டிய காகிதம், பைண்டுச் சாதனங்கள் ஆகியவற்றை வாங்குவதற்கு மட்டும் கவலைப்பட வேண்டியிருக்கிறது. அச்சகத்தை வைத்து நடத்த ஆரம்பித்தால் ஆட்களை வைத்து, சம்பளம் கொடுத்து நிர்வாகம் செய்தாக வேண்டிய பெருந் தொல்லைகளும் சேர்ந்துகொள்ளும். நூல் ஆராய்ச்சிக்கு நேரம் கிடைக்குமா என்பது சந்தேகம். ஆகையால் சந்நிதானத்தின் கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருப்ப