பக்கம்:தமிழ்த் தாத்தா உ. வே. சாமிநாத ஐயர்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

60

தமிழ்த் தாத்தா

அச்சிட வேண்டும் என்று திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் விரும்பினார். நான் அப்போது ஆசிரியருடன் அங்கே போயிருந்தேன். அதன் பிறகு மாயூரம் சம்பந்தமாக மயிலைத் திரிபந்தாதி என்னும் நூலை ஆசிரியர் வெளியிட்டார் சிறிய நூலாக இருந்தாலும் அதில் முகவுரை முதலியன சிறப்பாக அமைந்தன. திருப்பனந்தாளில் அப்போது காசிவாசி சொக்கலிங்கத் தம்பிரான் காசி மடத்தின் தலைவராக இருந்தார். அவருடைய இளவரசாகச் சாமிநாதத் தம்பிரான் இருந்தார். அவர் நன்றாகப் படித்தவர். கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகர் பரம்பரையில் வந்தவர். அவர் ஒருமுறை சென்னைக்கு வந்து சேத்துப்பட்டில் தங்கியிருந்தார். ஆசிரியப் பெருமான் அவரைப் போய்ப்பார்த்த போது சிவக்கொழுந்து தேசிகர் பாடல்களைப் பற்றிய பேச்சு எழுவது உண்டு. அவருடைய நூல்களை ஆசிரியப் பெருமான் பதிப்பித்தால் தமிழ் உலகத்திற்கு மிகவும் பயன்படும் என்று அவர் சொன்னார். அப்படியே செய்வதாக ஆசிரியப் பெருமான் ஒப்புக் கொண்டார்.


தமிழ்விடு தூதும் பிற நூல்களும்

தமிழ்விடு தூது என்னும் நூலை ஆசிரியர் ஆராய்ந்து வந்தார். தமிழின் பெருமையை மிகச் சிறப்பாகச் சொல்கிற நூல் அது. அதை வெளியிடவேண்டுமென்ற எண்ணம் ஆசிரியருக்கு இருந்தது. அதில் பல திருவிளக்குகளைப் பற்றிய செய்திகள் வருகின்றன. அவற்றைப்பற்றியெல்லாம் மாயூரநாதர் கும்பாபிஷேகத்திற்குச் சென்றிருந்தபோது அங்கு வந்திருந்த சிவசாரியார்களிடம் கேட்டுத் தெரிந்துகொண்டார். அந்தத் தமிழ்விடு தூதில் இருந்த ஒரு கண்ணி ஆசிரியப் பெருமான் உள்ளத்தை மிகவும் கவர்ந்தது.

'இருந்தமிழே உன்னால் இருந்தேன்; இமையோர்

விருந்தமிழ்த மென்றாலும் வேண்டேன்'

என்ற கண்ணிதான் அது.

திருத்தணிகைப் புராணம், கந்தபுராணம் ஆகியவற்றை இயற்றிய கச்சியப்ப முனிவர் மிகப் பெரும் புலவர். சிவஞான முனிவருடைய மாணாக்கர், மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு அந்த முனிவரிடம் மிகவும் பக்தி. 'இறைவன் என் முன்னால் தோன்றி என்ன வேண்டுமென்று கேட்டால், கச்சியப்ப முனிவரை ஒரே ஒருமுறை தரிசனம் பண்ணவேண்டுமென்று கேட்பேன்' என்று அந்தப் புலவர் பெருமான் சொல்வாராம். அந்த முனிவர் இயற்றிய கச்சி ஆனந்த ருத்திரேசர். வண்டு விடு தூது என்னும் நூலை விரிவான வகையில் வெளியிட வேண்டுமென்று ஆசிரியர் ஆராய்ச்சி செய்து வந்தார்.