உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்த் திருமண முறை.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30

6. தம்மில் இருந்து தமதுபாத்து உண்டற்றால்
அம்மா அரிவை முயக்கு.

மாநிறமுடைய இவ்வழகிய மங்கையினது சேர்க்கை தம் வீட்டிலிருந்து தம்முடைய முயற்சியால் வந்த பொருளைத் தமக்கு உரியவர் யாவருக்கும் பகிர்ந்துகொடுத்துத் தாமும் தமக்குரிய பாகத்தை அனுபவிப்பதைப் போன்ற இன்பத்தைத் தருகிறது.

7. அறிதோறும் அறியாமை கண்டற்றால் காமம்
செறிதோறும் சேயிழை மாட்டு.

நூல்களை ஊன்றிப் படிக்குந்தோறும் முன்பு இருந்த அறியாமையை உணர்ந்துகொள்வது போன்று சிறந்த ஆபரணங்களை அணிந்த இவளிடம் சேருந்தோறும் இவள் பால் உள்ள காதல் புதுமையாய் மேன்மேலும் மிகுந்து இன்பத் தைத் தருகிறது.

8. நன்னீரை வாழி அனிச்சமே நின்னினும்
மென்நீரள் யாம்வீழ் பவள்.

அனிச்சப்பூவே, நீ எல்லா மலர்களினும் மென்மையான தன்மையைப் பெற்றிருக்கின்றாய். ஆதலின் நீ வாழ்வாயாக. ஆனால் என்னால் விரும்பப்படுகின்றவள் உன்னைக்காட்டிலும் மென்மையான தன்மையுடையவள்.

9. முறிமேனி முத்தம் முறுவல் வெறிநாற்றம்
வேலுண்கண் வேய்த்தோ ளவட்கு.

மூங்கில்போலும் தோளினையுடைய இவளுக்கு உடல் தளிர் போன்ற தன்மை வாய்ந்தது. பல் முத்துப்போன்றது, மணம் இயற்கையாக அமைந்த நல்ல மணம். மை தீட்டப் பெற்ற அவள் கண்கள் வேல்போன்று இருக்கும்.

10. அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்.

அனிச்சமலரும் அன்னப் பறவையின் இறகும் ஆகிய இவைகள் இவள் பாதத்திற்கு (முள்ளோடு கூடிய) நெருஞ்சிப் பழம் போன்றவைகள்.

11. பாலோடு தேன்கலங் தற்றே பனிமொழி
வாலெயிறு ஊறிய நீர்.

மென்மையான மொழிகளைப் பேசுகின்ற இவளுடைய வெண்மையான பற்களில் ஊறிய நீர் பாலோடு தேன் கலந்தாற் போன்ற சுவையை யுடையதாயிருக்கின்றது.