பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சங்க காலம்

39


மிக்க அன்புடையவன். 'நகுதக்கனரே' என்னும் புறப் பாடலைப் பாடியவனும் இவனே.

இவனது காலத்தில் பாண்டியர் கோநகரமாகிய மதுரை தலைசிறந்த நகரமாய் விளங்கியது என்பதை மதுரைக்காஞ்சி மூலம் அறியமுடிகின்றது. நிலமடந்தையின் முகத்தைப் போலப் பொலிவுடன் விளங்கும் மதுரையினை வையை ஆறு அணி செய்ய, ஆழமுடைய அகழியாலும், பேரரசராலும் அழிக்கமுடியாத கோட்டை மதில்களாலும் முறையே சூழப்பட்ட இந்நகரினது கோட்டை வாயில் நெடிய நிலைகளையும், திண்ணிய கதவினையும், மாடங்களையும் கொண்டிலங்கியது. இக்கோட்டைக்குள் இருபுறங்களிலும் உயர்ந்து தோன்றும் சாரளங்களுடன் கூடிய வீடுகளை உடைய அகன்ற தெருக்கள் இருந்தன. கடைத்தெருக்கள் எப்பொழுதும் ஆரவாரத்துடன் விளங்கின. கட்டடங்கள் தோறும் கொடிகள் பறந்து பட்டொளி வீசின. நால்வகைப் படைகளும் நகரத்தில் இருந்தன. கோவில்களில் எப்பொழுதும் விழா நடந்துகொண்டே இருக்கும். இசையுடன் இன்னியம் எங்கும் கேட்கும்; முரசம் முழங்கும். இரவிலும் கூட கடைகள் பல திறந்திருக்கும். சுருங்கக்கூறின் பகலென்றும் இரவென்றும் பாராமல் மதுரை மக்கள் மகிழ்ச்சியுடன் எழுப்பிய ஆரவாரம் எங்கும் கேட்கும். இந்நிலையில் மதுரைமாநகர் மாண்புடன் விளங்கியது.

முடியுடை மூவேந்தரைப்போலவே உரிமையுடனும் வள்ளண்மையுடனும் வாழ்ந்த வள்ளல்கள் எழுவராவர். இவர்கள் புலவரைப் பெரிதும் போற்றிப் புரந்தனர். வறிஞரைத் தம் வண்மையாற் காத்தனர். நத்தத்தனார் என்னும் புலவர் இந்த எழுபெரும் வள்ளல்களையும் தன் சிறுபாணாற்றுப்படை என்னும் நூலில் பாடியுள்ளார்.