பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சங்க காலம்

53


சமணராயினும் பிற சமயங்களைத் தாழ்த்திப் பாடவில்லை. ஆனால் மணிமேகலை ஆசிரியரோ புத்தமே சிறந்தது என்று கூறுகிறார். மணிமேகலை மூலம் பிற சமயங்களோடு போராட்டம் நடத்துகிறார். பிற சமயங்களின் குறைபாட்டை எடுத்துக் காட்டுகிறார். இறுதியில் புத்த சமயத்துக்கு வாகை மாலை சூட்டுகிறார். புத்த சமயக் கருத்துக்கள் மிக அதிகமாகக் கூறப்பட்டுள்ளன. அதனால் நூல் சுவை குன்றிக் காணப்படுகிறது.

சங்க காலத்தைவிடக் காப்பிய காலத்திலே உள்ள நகரங்கள் ஓரளவுக்கு விரிவடைந்திருந்தன என்று கூறலாம்! சிலப்பதிகாரத்தில் காவிரிப்பூம்பட்டினம், உறையூர், மதுரை, வஞ்சி முதலிய பேரூர்களின் சிறப்பு நன்கு பேசப்படுகின்றது. 'தென்றமிழ் நன்னாட்டுத் தீதுதீர் மதுரை' என கவுந்தியடிகளால் பாராட்டப்பெற்ற பாண்டியர் தலைநகர் காப்பிய காலத்தில் சிறந்த நிலையில் விளங்கியது. வடக்கே வையை அணிசெய்ய, புறத்தே காவற்காடும், அகழியும் கொண்டு மதுரை மாநகர் அன்று விளங்கியது. மேலும் புலவர் நாவில் பொருந்திய பூங்கொடியாகிய வையை பொய்யாக் குலக்கொடியாக எங்கும் தவழ்ந்து சென்று விளையாடியதால், மதுரை நகரின் புறஞ்சேரி' புள்ளணி கழனியும் பொழிலும் பொருந்தி, வெள்ள நீர்ப்பண்ணையும் விரிநீர் ஏரியும்' காய்குலைத் தெங்கும் வாழையும் கமுகும் பந்தரும்' கொண்டு அறம் புரியும் மாந்தரின் இருக்கையாய் விளங்கியது. நகரின் மதில் வாயில் வாளேந்திய யவன வீரர்களால் காக்கப்பட்டது. அவ்வாயிலையடுத்து திருவீற்றிருந்த பெருவீதிகளும், அரசர் வீதியும், கலைவல்ல கணிகையர் வீதியும், அங்காடி வீதியும், மணிகள் நிரம்பிய வண்ணக்கர் வீதியும், பொன் நிறைந்த பொற்கடை வீதியும், நூலினும் மயிரினும் நுழைநூற்பட்டினும் செய்த ஆடைகள் நிறைந்த