பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

தமிழ் நாடும் மொழியும்


சோழப்பேரரசு அழிந்தநேரத்தில் வடக்கிலிருந்து களப்பிரரும் பல்லவரும் முறையே தமிழகத்திற்கு வந்தனர். களப்பிரருக்கும் பல்லவருக்குமிடையே அடிக்கடி போர் நிகழ்ந்து கொண்டே இருந்தது. ஒருசில வரலாற்றறிஞர்கள் இவர்களே பிற்காலத்தில் முத்தரையச் சிற்றரசராகவும் குறுநில மன்னராகவும் விளங்கினர் என்று கூறுவர். இன்று செந்தமிழ்நாட்டில் வாழும் கள்ளர் மரபினர் களப்பிரர் வழிவந்தோராவர் என மற்றுஞ்சிலர் கூறுகின்றனர்.

இவ்விருண்ட காலத்தில் பாலி, பிராகிருதம், வடமொழி ஆகிய பிற மொழிகளும், பௌத்தம், சமணம் ஆகிய புறச் சமயங்களும் உயர்வெய்தின; பெருமையுற்றன. எனவே தமிழ்மொழி ஆதரவும் வளர்ச்சியும் இல்லாத - காரணத்தால் தளர்ச்சி அடைந்தது; தழைக்காது போயிற்று. களப்பிரர் பௌத்த சமயத்தைத் தமிழ்நாடெங்கணும் பரப்புவதற்குப் பெரிதும் முயன்றனர். பௌத்த சமய நூல்கள் பல பாலி மொழியில் எழுதப்பட்டன. இதன் காரணமாய் நம் தாய் மொழி வளர்ச்சி தடையுற்றது. எனினும் இவ்விருண்டகாலத்தினும் பல நீதி நூல்களும் ஏனைய சில நூல்களும் தமிழில் தோன்றின. அவற்றைப் பற்றி இலக்கிய வரலாற்றில் விரிவாகக் காண்போம்.