பக்கம்:தமிழ்நாடும் மொழியும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

80

தமிழ் நாடும் மொழியும்


பல்லவ மன்னர்கள் பழைய கோவில்களைப் புதுப்பித்தனர்; புதிய கோவில்களைக் கட்டினர். செங்கற் கோவில்கள் எல்லாம் கருங்கற் கோவில்களாக மாறின. மொட்டை மலைகள் எல்லாம் கோவில்களாக மாற்றப்பட்டன. மலைகளின் சரிவுகளிலே குடைவரைக் கோவில்கள் குடையப்பட்டன. மலைகள் கற்களாக உடைக்கப்பட்டு, அடுக்கப்பட்டுக் கோவில்களாகக் கட்டப்பட்டன. நாட்டுமக்களிடையே சமயக் குரவர்களின் பக்திப் பாடல்கள் வேகமாகப் பரவின. இதனால் - சைவமும் வைணவமும் நன்கு செழித்தன; ஓங்கின. பிற சமயங்கள் வீழ்ந்தன.

பல்லவர் வளர்த்த கலைகள்

தமிழக வரலாற்றிலே பல்லவர்க்குப் பல பொன்னேடுகளை அளித்தவை அவர்களால் வளர்க்கப்பட்ட கலைகளே. பல்லவர்கள் பல கலைகளையும் வளர்த்தபோதிலும் அவர்களுக்குப் பெருமை அளித்த கலைகள் சிற்பக்கலையும் கட்டடக் கலையுமாம். பல்லவராட்சியில் மண்ணாலும், மரத்தாலும் ஆன கோவில் எல்லாம் கற்கோவில்களாக மாறின. தமிழகத்திலே முதன் முதல் குகைக் கோவில்களும் கற்றளிகளும் ஏற்படுத்திய பெருமை பல்லவர்க்கே உரியது. பல்லவர் காலத்தில் செழிப்படைந்த கலைகள் சிற்பக்கலையும் (Sculpture). கட்டடக்கலையும் (Architecture) ஆம். பல்லவர் காலக் கோவில்கள் இரு வகைப்படும். முழு மலையைக் குடைந்து அமைக்கப்பட்ட குகைக் கோவில்கள்; கற்களை அடுக்கி அமைக்கப்பட்ட கற்றளிகள். சிற்பக் கலையை வளர்த்த பல்லவருள் சிறப்பாகக் குறிப்பிடத்தக்கவர்கள் மகேந்திரவர்மன், நரசிம்மவர்மன், இராசசிம்மன், அபராசிதவர்மன் என்போராவர். இந்நால்வரும் தனித்தனியே சிற்பக் கலையை வளர்த்தனர். ஒவ்வொருவரும் தமக்கெனத் தனிவகையான சிற்பங்களை வகுத்தனர். எனவே பல்லவர் காலச் சிற்பக்கலை நான்கு விதமான முறைகளை உடையது.