௩. புகையிலைக் கட்டை யெடுத்தல்
இதுவும் ஒளிந்து விளையாடும் விளையாட்டே.
ஆடுவாரெல்லாம் உத்திகட்டி இருகட்சியாகப் பிரிந்து கொண்டபின், ஒரு கட்சியார் ஓடி ஒளிந்துகொள்வர். இன்னொரு கட்சியார், கடைகட்குச் சென்று புகையிலைக் கட்டை (அல்லது வெற்றிலைக்காம்பு) எடுத்துவந்து, ஒளிந்தவரைத் தேடிப்பிடிப்பர். யாரையேனும் கண்டுபிடித்தபோது, கடைக்குச் சென்று வந்தமைக்கு அடையாளமாகப் புகையிலைக் கட்டையைக் காட்டல்வேண்டும். கண்டு பிடிக்கப்பட்டவர் முன்பு எல்லாரும் நின்ற இடத்திற்கு வந்துவிடுவர். எல்லாருங் கண்டுபிடிக்கப்பட்டபின் வினைமாறி விளையாடுவர்.
ஒளிந்திருந்தவரைக் கண்டு பிடிக்கும்போது புகையிலைக் கட்டையைக் காட்டாவிடினும், யாரையேனுங் கண்டுபிடிக்க முடியாவிடினும், முன்பு கண்டுபிடித்தவரே மீண்டுங் கண்டுபிடித்தல் வேண்டும். இது பாண்டிநாட்டு விளையாட்டு. இதன் சோழநாட்டு வகை வருமாறு :
ஆடுவாரெல்லாரும் கைபோட்டு ஒவ்வொருவராகப் பிரித்து, இறுதியிலகப்பட்டுக் கொண்டவர் ஏனையாரைப் பிடித்தல்வேண்டும். பிடிக்கவேண்டியவர் சற்றுத் தொலைவிலுள்ள ஒரு குறிப்பிட்ட தழையைக் கொண்டு வந்தபின்புதான் பிடித்தல் வேண்டும். அதற்குள் ஏனையரெல்லாம் மறைவான இடங்களில் ஒளிந்துகொள்வர். கண்டுபிடிப்பவர் ஒளிந்திருப்பவரைக் கையினாற் பிடித்துக்கொள்ளலாம், அல்லது அவர் பெயரைமட்டும் பிறர்க்குக் கேட்குமாறு உரக்கச் சொல்லலாம். இவ்விரண்டில் எது செய்வதென்று முன்னரே தீர்மானிக்கப்பட்டிருக்கும். கண்டு பிடிக்கப்பட்டவர் தழையைக் காட்டச்சொல்லும்போது, கண்டுபிடித்தவர் காட்டல் வேண்டும்; இல்லாவிடின், மறுமுறையும் அவரே கண்டுபிடித்தல் வேண்டும். தழை காட்டப்படின், கண்டுபிடிக்கப்பட்டலர் மறுமுறை கண்டுபிடித்தல் வேண்டும். இவ்விளையாட்டு குலீம்தார் என்னும் உருதுப் பெயரால் வழங்குகின்றது. இதைத் தனித்தமிழில் தழைபறித்தல் எனலாம்.