II. குழந்தைப் பக்கம்
நற்றாயரும் செவிலித்தாயரும் பிறரும், ஐயாண்டிற்குக் கீழ்ப்பட்ட குழந்தைகளைக் கொண்டு ஆடும் ஆட்டத்தொகுதி, குழந்தைப் பக்கம் ஆகும்.
இருபொழுதாட்டு
௧. ‘சோறு கொண்டுபோகிற வழியிலே’
முதியார் ஒருவர் ஒரு குழந்தையின் கையை அகங்கை மேனோக்கப் பிடித்துக்கொண்டு, அதன் ஐந்துவிரல்களையும் ஒவ்வொன்றாக முறையே தொட்டு “இது ஐயாவிற்கு, இது அம்மாவிற்கு, இது அண்ணனுக்கு, இது அக்காவிற்கு, இது உனக்கு,” என்று கூறி, அவ் வகங்கையிற் பருப்புக் கடைவதுபோல் தம் கையால் தேய்த்து. அப்பருப்பைப் பலர்க்கும் பகிர்வதுபோற் கையால் நடித்துக்காட்டி, பின்பு மீண்டும் பருப்புக் கடைந்து, “சோறு கொண்டுபோகிற வழியிலே” என்று சொல்லிக்கொண்டு தம் கையை அக் குழந்தையின் அக்குள்வரை மெல்ல இழுத்துச்சென்று, “கிச்சுக் கிச்சு” என்று சொல்லிக் கிச்சங் காட்டுவர். இது குழந்தைக்கு மகிழ்ச்சியையும் சிரிப்பையும் உண்டுபண்ணும்.
பருப்புக் கடைவதுபோற் செய்யும்போது, “பருப்புக் கடைந்து பருப்புக் கடைந்து” என்றும், பருப்பைப் பகிர்வதுபோற் செய்யும்போது, “இந்தா உனக்கு, இந்தா உனக்கு” என்றும் சொல்லப்படும்.
வழக்கமாய்க் கூழுங் கஞ்சியும் உண்பவர், “சோறு கொண்டுபோகிற வழியிலே” என்பதிற்குப் பதிலாக, “கஞ்சி கொண்டுபோகிற வழியிலே” என்பர். அதனால் அவர் அத்தொடராலேயே இவ்விளையாட்டைக் குறிப்பர்.
தொலைவான இடத்தில் வேலை செய்யும் அண்ணனுக்குப் பருப்பும் சோறும் கொண்டுபோகும் தங்கையை, ஒருவர் கிச்சுக் காட்டிய வினையை இவ்விளையாட்டுக் குறிக்கும்போலும்.