பின்னிணைப்பு :
I. வழக்கற்ற விளையாட்டுக்கள்
1. அறியப்பட்டவை
(1) ஆண்பாற் பகுதி
வட்டு
இது பகலில் ஆடப்படும் ஒருவகைச் சூதாட்டாகும்.
(2) பெண்பாற் பகுதி
க. பல பந்து
ஒருத்தி 5 பந்து கொண்டாடியது சிந்தாமணியுள்ளும், இருமகளிர் 7 பந்தும் 12 பத்தும் கொண்டாடியது பெருங் கதையுள்ளும், கூறப்பட்டுள்ளன. இவை பகலாட்டு.
2. அம்மானை
மூவர் மகளிர் முறையே கூற்றும் வினாவும் விடையுமாக முக்கூறுடையதும் ‘அம்மானை’ என்றிறுவதுமான ஒருவகைக் கொச்சகக் கலிப்பாவைப் பாடிக்கொண்டு, தனித்தனி பலபந்துகளைப் போட்டுப் பிடித்து ஆடும் ஆட்டு அம்மானையாம். இதுவும் பகலாட்டே.
உழுவையுரி யரைக்கசைத்த உலகமெலா முடையபெரு
முழுமுதலே கருவைநகர் முகந்திருந்தார் அம்மானை
முழுமுதலே கருவைநகர் முகந்திருந்தா ராமாயின்
எளியவர்போற் களவாண்ட தெம்முறையே அம்மானை
இதனாலன் றேமறைவாய் இருக்கின்றார் அம்மானை
என்பது ஓர் அம்மானைச் செய்யுளாம்.