உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்

[ஆண்பாற்

முதலில் எறியப்பட்ட இரு கோலிகளும் இருவிரலுக்கு மேல் இடையிட்டிருப்பின், எதிரி சொன்னதைத்தான் அடித்தல் வேண்டும்; இருவிரற்கு உட்பட்டிருப்பின், எதையும் அடிக்கலாம். இங்ஙனம் விருப்பமானதை அடிக்குங் காரணம் பற்றியே, இவ் ஆட்டிற்கு இட்டம் அல்லது கிசேபி என்று பெயர்.

இடையீடு இருவிரற்குட்பட்ட நிலையில் எதையும் அடிக்கும்போது இரண்டிலும் பட்டுவிட்டால், பச்சா என்னுங் குற்றமாம். அதோடு, அடித்த கோலியாயினும் அடிக்கப்பட்ட கோலியாயினும் குழிக்குள் வீழ்ந்துவிடின், இரட்டைப்பச்சா என்னுங் குற்றமாம். குற்றமெல்லாம் தோல்வித்தானமே.

முதலில் எறிந்த இரு கோலிகளும் அரங்கிற்கு உள் வீழினும் வெளி வீழினும்,மூன்றாங் கோலி நேரே குழிக்குள் விழுந்துவிடின், எறிந்தவனுக்கு எதிரி பேசின தொகையை இரட்டிப்பாய்க் கட்டிவிடில் வேண்டும்.

முதலில் எறிந்த இரு கோலிகளுள் ஒன்று அரங்கிற்கு வெளியே நிற்பின், எதிரி அதை எடுத்து அரங்குக்கோட்டின் மேல் வைப்பான்; அல்லது முட்டிக்கையால் அரங்கிற்குள் தள்ளிவிடுவான். இவற்றுள் பின்னதற்கு மூட்டுதல் என்று பெயர்.

அடிக்குங் கோலி முதல் வீழ்விலேயே அரங்கிற்குள் விழுந்துவிடல் வேண்டும். அங்ஙனமன்றி அதற்கு வெளியே வீழின், அது வெளிமட்டு என்னுங்குற்றமாதலின் ஆடினவன் தோற்றவனாவன்.

மூன்றாங் கோலி (அதாவது அடிக்குங் கோலி) அரங்கிற்குள் காயை அடிக்காது கோட்டின்மேல் நிற்பின், கோடு என்னுங் குற்றமாம். அதை ‘லைன்’ (line) அல்லது ‘லாக்’ (lock) என்னும் ஆங்கிலச் சொல்லாற் குறிப்பர்.

உத்தியில் நின்று அடித்தவன் அதைவிட்டு நீங்கும் போது, மூடியை மிதிக்காது ஓரெட்டுப் பின்வைத்து இடமாகவாவது வலமாகவாவது சுற்றி முன்வரல் வேண்டும்; அங்ஙனமன்றி மூடியை மிதித்துவிடின் தவறினவனாவன்.