உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

தமிழ்நாட்டு விளையாட்டுக்கள்

ஙனம் பிறரெல்லாம் அதைத் தம் குச்சால் தள்ளித் தள்ளி நெடுந்தொலைவிற்குக் கொண்டு போவர்.

குச்சுப் பிடித்தவன், தன் குச்சு விழுந்தவுடன் வட்டத்துள்ளிருக்கும் நாற்கல்லையும் எடுத்துச் சதுரத்தில் மூலைக்கொன்றாக வைத்துவிட்டு, பிறருள் ஒருவனைப்போய்த் தொடல் வேண்டும். நாற் கல்லையும் மூலைக்கொன்றாக வையாது போய்த் தொடின், அது கூட்டன்று. குச்சைத் தள்ளுபவர், குச்சுப் பிடித்தவன் தம்மைத் தொடுமுன், அரங்கு மூலைக் கல்லின்மேலேனும் ஆங்காங்குள்ள பிற கருங்கல்லின் மேலேனும் தம் குச்சை வைத்துக்கொண்டால், அவரைத் தொடல் கூடாது.

யாரேனும் ஒருவன் தொடப்பட்டுவிடின், அவன் தான் தொடப்பட்டவிடத்திலிருந்து சதுர அரங்கு வரையும், தன் குச்சை வாயிற் கௌவிக்கொண்டும், அல்லது வலக்கையிற் பிடித்துக் கொண்டும், இடக்கையை மடக்கி முதுகில் வைத்துக்கொண்டும்,

“எங்கள் வீட்டு நாயி எலும்பு கடிக்கப் போச்சு
கல்லால் அடித்தேன் காலொடிந்து போச்சு”

என்று இடைவிடாது பாடிக்கொண்டு, நொண்டியடித்து வரல் வேண்டும். இங்ஙனம் நெடுகலும் வரத் தவறின், மீண்டும் புறப்பட்ட இடத்திலிருந்து அவ்வாறு வரல்வேண்டும். அங்ஙனம் வந்த பின், தொடப்பட்டவன் குச்சுப் பிடிப்பான். அதன் பின், முன் போன்றே திரும்பவும் ஆடப்பெறும்.