பக்கம்:தமிழ்ப் பழமொழிகள் 1.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
முகவுரை


ந்தப் புத்தகத்தில் ஏறத்தாழ 25,000 பழமொழிகள் உள்ளன. இவை கடந்த நாற்பது ஆண்டுகளாக நான் சேகரித்தவை. சொற்பொழிவு செய்யும் பொருட்டு வெளியூர்களுக்குச் சென்ற காலங்களில் அங்கே உள்ள ஆடவர்களிடமும் பெண்மணிகளிடமும் கேட்டுப் பழமொழிகளை எழுதி வந்தேன். பெரும்பாலும் முதிய பெண்மணிகளே பல பழமொழிகளைச் சொன்னார்கள். பழமொழியை முதுமொழி என்றும் வசனம் என்றும் கூறுவர். பழமொழிகள் அடங்கிய பாடல்களைப் பெற்ற நூல்கள் பழமொழி நானூறு, கோவிந்தசதகம், தண்டலையார் சதகம், இரத்தின சபாபதி மாலை, அருணாசல கவி இராம நாடகக் கீர்த்தனை முதலியவை.

இந்தப் பழமொழிகளில் பல்வேறு சாதியினரைக் குறை கூறி உள்ளவை பல உண்டு. அவற்றைக் கண்டு அந்தச் சாதியைச் சேர்ந்த அன்பர்கள் சினம் கொள்ள மாட்டார்கள் என்று நம்புகிறேன். இழித்துக் கூறுவதில் எந்தச் சாதியினரையும் விட்டு வைக்கவில்லை. பார்ப்பனர்களை இழித்துக் கூறும் பழமொழிகள் பல. அத்தகையவற்றை அப்படி அப்படியே காட்டியுள்ளேன். தமிழ் மக்களுடைய எண்ணம் எவ்வாறு படர்ந்தது என்பதை இவை காட்டுகின்றன.

நாடோடி இலக்கியத்தைச் சார்ந்தவை பழமொழிகள். அறிவு தெரிந்த சிறுவர் முதல் முதுமை உடையவர்கள் வரை யாவரும் தாம் பேசும் பொழுது பழமொழிகளை ஆளுவார்கள். அவரவர்களுடைய அனுபவத்துக்கு ஏற்ற வகையில் அவை இருக்கும். உபநிடதம், இலக்கிய இலக்கணங்கள் ஆகியவற்றைப் பற்றிய பழமொழிகளும் உண்டு. விலங்கினங்கள், பறவைகள், நீர்வாழ் பிராணிகள், ஊர்வன, புழுபூச்சிகள் முதலியவற்றைப் பற்றிய பழமொழிகள் பல. இவற்றை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதலாம். பல பெரியோர்களுடைய வரலாறுகள் சம்பந்தமான பழமொழிகளும்