'முடியுமா பேச, வேற்று
மொழிக்கலப் பின்றி? வாழ்வு
விடியுமா தமிழால்?-என்று
வினவிய ஆணவந் தான்
/ஒடியுமாறுதைத்து, நாவில்
ஒரு தனித் தமிழே, கற்பில்
அடையுமா றுழைத்த எங்கள்
அடிகளார் புகழே வாழ்க!”
கவித் திருமதி செளந்தரா கைலாசம் அவர்கள் அமைதியை ஆற்றொழுக்கில் வைத்துப் பாடுபவர். அவரே, "ஆணவந்தான் ஒடியுமாறு உதைத்து” என்று வெடித்திடும் குரலில் பாடினார். குரலை வெடிக்க வைத்தது அடிகளாரின் தனித்தமிழ் உணர்வு மூட்டிய நெருப்புப் பொறி எனலாம். இவ்வெடிப்பில் முழங்குவது அடிகளாரின் தமிழ் முத்திரை; ஆம் தமிழ் முத்திரை! மேலும் பேராசிரியர்க்கெல்லாம் பேராசிரியராய்த் திகழ்ந்த முனைவர் மு.வரதராசனார் குரல், வாழ்த்துடன் இனிக்கிறது:
சாதிப் பேயைச் சாடிய வீரன்; சைவ சமயம் சாதியைக் கடந்ததென்
றையந் தீர அறிவுறுத் திட்டோன் மறைமலை யடிகள் மாண்புகழ்
துறைதொறும் தமிழ்போல் துலங்குக பெரிதே'
என்று எழுந்த அகவல் சாதிப்பேய் குமுகாயத்தில் புகுந்ததைப்போல்
சைவத்திலும் புகுந்ததை அடிகளார் சாடிய சாடிலை ஒலிக்கிறது. இது
அடிகளாரின் சைவப்பகுத்தறிவு முழக்கம்.
பாவேந்தர் பாட்டின் தமிழின ஊற்றம் கவித்திருமதியின் தமிழ் முத்திரை முனைவரின் சைவப் பகுத்தறிவு முழக்கம்
ஆகிய மூன்றும் இணைந்து பிணைந்த திருவுருவமே நிறைதமிழ்ச் செம்மல் மறைமலையடிகளார் எனலாம். தமிழின ஊற்றம்’ என்னும் வயிரத்தால் உடலாக்கி 'தனித்தமிழ்’ என்னும் முத்திரையால் உயிரூட்டி, "சைவப்பகுத்தறிவு'என்னும் முழக்கத்தால் அறிவேற்றிய நிறை உருவமே மறைமலையடிகளார் எனலாம். இம்மூன்றுமே முனைத்த கருவிகளாகப் பைந்தமிழ் அன்னைக்குச் சொற்பொழிவு என்னும் பொன்னாடை உடுத்தி, நூல்கள் என்னும் மணியணிகளைப்பூட்டின.
இன்று,ஊற்றத்தையும், முத்திரையையும், முழக்கத்தையும் என்பொழிவு விரிக்கும். நாளை, பேச்சுத்திறனையும், எழுத்தாற்றலையும் உங்களுடன் பகிர்ந்து கொள்வேன்.