பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு

அவை புலவர் பலரால் தத்தம் கால அரசர், வள்ளல்கள் முதலியோரைப் பற்றிப் பாடப்பெற்றவை; அக்காலப் போர் களைப் பற்றியவை அறம், பொருள், வீடு என்னும் மூன்றையும் பற்றியவை. ஆதலின், அவற்றுள் நம்பத். தகாதன' என்று ஒதுக்கித் தள்ளத்தக்க செய்திகள் இருத்தல் அருமையினும் அருமை. -

 சுருங்கக் கூறின், புறநானூறு. மிகப் பழைய காலத் தமிழ் மக்கள்-சிற்றரசர்-பேரரசர்-கொடையாளிகள்-புலவர். வீரர் இவர்தம் வாழ்க்கைகளையும் நாகரிகப் பண்புகளையும் நன்கு விளக்கும் வரலாற்று நூலாகும். அதனை நன்கு ஆராய்ந்து முறைப்பட வைத்து எழுதப்புகின், பண்டைத் தமிழக வரலாறு' என்னும் வரலாற்று நூலை ஒருவாறு எழுதி, முடிக்கலாம். இது நிற்க. -
அறம், பொருள், வீடு என்னும் புற ஒழுக்கம் பற்றிய நானூறு பாக்களின் தொகுதியே புற-நானூறு என்பது. இதில் உள்ள பாடல்களைப் பாடிய அரசர், அந்தணர், வணிகர், வேளாளர் முதலிய புலவர், பல்வேறு காலங்களில் வாழ்ந்தவர் ஆவர். இந்நூல் தொகுக்கப் பெற்ற பிற்காலத்தில் இப்புலவர் சிலருடைய பெயர்களே புலனாக, வில்லை. ஆதலின் தொகுத்தவர்கள், பாவடிகளிற் பயின்று வரும் தொடர்களையும், பாக்களிற் காணப்படும் சிறப்பியல்பு களையும் கொண்டு தம் மனம் போனவாறு அடிக்குறிப்பில் புலவர் பெயர்களை, ஆக்கியிருத்தல் அறிவுடையார் அறிந்ததேயாகும். சான்றாக, ஒருஉத்தனார், ஒருசிறைப் பெயரியனார், ஒரேர் உழவர், கூகைக் கோழியார், தொடித்தலை விழுத்தண்டினார், தும்பிசொகினனார், வெள்ளெருக்கிலையார், வெள்ளைமாளர் முதலிய பெயர் களைக் காண்க. மொழி ஆராய்ச்சியிற் புகினும், சில 

பாக்களின் நடை வேறுபட்டிருப்பதை நன்குணரலாம். செய்யுட்களிற் கூறப்பட்டுள்ள செய்திகளை நோக்கினும் இஃது, உண்மையாகிறது.