உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா. இராசமாணிக்கனார்

197


சேந்தன் என்பவர் நூலாசிரியராகவோ, அரசாங்க எழுத்தாளராகவோ இருந்திருத்தல் வேண்டும்.

இசையிலும் கூத்திலும் வல்ல பெருமக்களும் இயற்றமிழ்ப் புலவர்களாய்த் திகழ்ந்தனர் என்பது உறையூர் முதுகூத்தனார், வேம்பற்றுார்க் கண்ணன் கூத்தன், குழல் தித்தன் என்ற பெயர்களைக் கொண்டு அறியப்படும்.

ஊர்தோறும் பண்டப்பொதிகளைக் கொண்டு சென்று பேரிகையடித்து வாணிகம் செய்தவர் பேரிகைச் செட்டிமார் எனப்பட்டனர், அவருள் ஒருவரே பேரி சாத்தனார் என்பவர். மதுரைச் சீத்தலைச் சாத்தனார். மதுரை அறுவை வாணிகள்ன் இளவேட்டனார் ஆகிய மூவரும் வணிகராவர்.

வீடு கட்டும் தொழிலாளர் கொற்றனார் எனப்பட்டனர். உறையூர் முது கொற்றனார், கொற்றனார், செல்லூர்க் கொற்றன், படுமரத்து மோசி கொற்றன், காஞ்சிக் கொற்றன், கூழிக் கொற்றன் ஆகிய அறுவரும் கட்டடத் தொழிலாளர். இவர்கள் பாடிய பாக்களும் இந்நூலில் இடம் பெற்றுள்ளன.

இரும்பு, பொன் தொழிலாளர் கொல்லர் எனப்பட்டனர். அவர்களும் புலவர்களாய்த் திகழ்ந்தனர். கொல்லன் அழிசி, தங்கால் முடக் கொல்லனார். மதுரைக் கொல்லன் புலவன், மதுரைப் பெருங்கொல்லன் என்பவர் பாடிய பாடல்கள் இந் நூலில் உள்ளன.

பெண்பாற் புலவர்கள்

சங்ககாலப் புலவருள் மெல்லியலாரும் இடம் பெற்றிருந்தனர். அள்ளூர் நன்முல்லையார், ஆதிமந்தியார், ஒக்கூர் மாசாத்தியார், ஔவையார், கச்சிப் பேட்டு நன்னாகையார், கழார்ர்கீரன் எயிற்றி, காக்கை பாடினியார் நச்செள்ளையார், நன்னாகையார், நெடும்பல்லியத்தை,[1] பூங்கண்


  1. இயம்-வாத்தியம்; நெடும்பல்லியம்-நீண்ட பல வாத்தியங்கள். இவற்றை வாசித்தவன் ‘நெடும்பல்லியத்தன்’ எனப்பட்டான். இவற்றை வாசித்தவள் ‘நெடும்பல்லியத்தி’ எனப்பட்டாள்.