டாக்டர் மா. இராசமாணிக்கனார்
335
“இளங்கோ வேந்தன் அருளிக் கேட்ப
வளங்கெழு கூல வாணிகன் சாத்தன்
மாவண் தமிழ்த்திற மணிமே கலைதுறவு
ஆறைம்பாட்டினுள் அறியவைத் தனனென்'
”என்று மணிமேகலையின் பதிகமும் அவ்விருவரும் ஒரே காலத்தவர் என்பதை உறுதிப்படுத்துகின்றன. எனவே, கயவாகுவின் காலம் என்று துணியப்பட்ட கி. பி. இரண்டாம் நூற்றாண்டின் முற்பகுதியே சிலப்பதிகாரம் செய்யப்பட்ட காலம் என்று கொள்வது பொருத்தமாகும்.
பேராசிரியர் கூறும்தடைகள்
சிலப்பதிகாரம் கி. பி. 500க்குப் பிற்பட்டதாகும் என்பதற்குப் பேராசிரியர் எஸ்.வையாபுரிப்பிள்ளை அவர்கள் கீழ்வரும் காரணங்களைக் கூறியுள்ளனர் :
1. இளங்கோவடிகள் செங்குட்டுவன் தம்பி என்பது கூறப்படுகிறது. அதற்கு மணிமேகலையிலோ பதிற்றுப்பத்திலோ சான்றில்லை.
2. பத்தினி விழாவின்போது இலங்கைக் கயவாகு வேந்தன் சேரநாடு வந்திருந்தான் என்பதற்குச்சிலப்பதிகாரம் தவிர மணிமேகலை முதலிய வேறு நூல்களில் சான்றில்லை; இலங்கை வரலாறு கூறும் மகாவம்சத்திலும் கூறப்படவில்லை; கி. பி. 16ஆம் நூற்றாண்டில் எழுதப்பெற்ற இராசவழி என்னும் நூலில்தான் கூறப்பட்டுள்ளது.
3. இளங்கோவடிகள் செங்குட்டுவன் தம்பியாயிருப்பின் அவர் காலம் சங்க காலமாகும். அவர் பாடிய பாடல் ஒன்றேனும் தொகை நூல்களில் இல்லை. அவர் மணிமேகலை பாடிய சாத்தனார் தவிர வேறு சங்கப் புலவர்களை அறிந்தவர் என்பதற்குச் சான்றில்லை.
4. மணிமேகலை ஆசிரியரான சாத்தனார் சீத்தலைச் சாத்தனாரல்லர். அவர் அரசு கட்டிலில் துஞ்சிய நெடுஞ்.