பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

52

தமிழ் மொழி-இலக்கிய வரலாறு


தமிழர் அதனை ஒரு கலையாகவே வளர்த்துவந்தனர் என்பது தொல்காப்பியப் புறத்திணை இயலால் நன்கு தெளிவாகும்.

போர் முறைகள்: பண்டைத் தமிழர் போரில் அறநெறியைக் கையாண்டனர். ஒரு நாட்டின் மீது படையெடுக்க விரும்பிய அரசன் முதலில் பகைவனது நாட்டிலுள்ள ஆனிரைகளைக் கவர்வான். இம்முயற்சி வெட்சித்திணை எனப்படும் (திணை-ஒழுக்கம்). இம்முயற்சியின் போது பகை வீரர் வெட்சி வீரரின் முயற்சியைத் தடுப்பர். இங்ஙனம் தடுக்கும் முயற்சி கரந்தைத் திணை எனப்படும். வெட்சித் திணையார் வெட்சி மலர்களைச் சூடுவர்; கரந்தைத் திணையார் கரந்தை மலர்களைச் சூடுவர்.

நாட்டின்மீது நடைபெறும் படையெடுப்பு வஞ்சித்திணை எனப்படும். அப்படையெடுப்பை எதிர்த்து நிற்றல் காஞ்சித்திணை எனப்படும். கோட்டையை முற்றுகையிடல் உழிஞைத்திணை எனப்படும். கோட்டையுள் இருந்து எதிர்த்தல் நொச்சித் திணை எனப்படும். கோட்டைக்கப்பால் வெட்ட வெளியில் நடைபெறும் கடும்போர் தும்பைத் திணை எனப்படும். போரில் வெற்றி பெறுதல் வாகைத் திணை எனப்படும். ஒவ்வொரு திணைச் செயலிலும் ஈடுபட்ட வீரர்கள் அத்திணைக்குரிய மலர்களை அணிந்து கொள்ளுதல் மரபு.

மேலே கூறப்பெற்ற ஒவ்வொரு திணைப்போரும் பல படிகளையுடையது. அப்படிகள் துறைகள் எனப்படும். இப்போர்களைப் பற்றிய விளக்கம் தொல்காப்பியம்-புறத்திணை இயலில் தெளிவாகத் தரப்பட்டுள்ளது. இக்கலை வளர்ச்சி தொல்காப்பியர் காலத்தில் திடீரென ஏற்பட்டிருத்தல் இயலாது. தொல்காப்பியர்க்கு முன்னரே-பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே வாழையடி வாழையாக வளர்ந்து வந்த போர்க்கலையின் விரிவே தொல்காப்பியத்தில் காணப்படுகின்றது என்று கொள்ளுதலே அறிவுடைமையாகும்.