70
தமிழ்மொழி-இலக்கிய வரலாறு
வயிரம் முதலிய விலை உயர்ந்த மணிகள் ரோமப் பெரு நாட்டுக்கு அனுப்பப்பட்டன.
இப்பல பொருள்களையும் பெற்றுக்கொண்ட ரோமர்கள் இவற்றுக்குப் பதிலாகப் பொன் வெள்ளி நாணயங்களையும், உயர்ந்த மதுவகைகளையும், பவழம், ஈயம், தகரம், எந்திரப் பொறிகள் முதலியவற்றையும் ஏற்றுமதி செய்தனர்.[1] பிளைநி (கி. பி. 24-79) என்ற மேனாட்டு யாத்திரிகர், தமிழகத்திலிருந்து ரோம் நாட்டுக்கு ஏற்றுமதியான முத்துகள், மெல்லிய ஆடைகள், இன்பப் பொருள்கள் இவற்றுக்காக ரோம் நாட்டுச் செல்வம் மிகுதியாகச் செலவழிக்கப்பட்டது என்று வருந்திக் கூறியுள்ளனர்.[2] “செங்கடலிலுள்ள ஏசிரிஸ் என்னும் இடத்திலிருந்து (பருவக்காற்றுச் செம்மையாக வீசினால்) நாற்பது நாட்களில் சேரநாட்டு முசிறியைக் கப்பல்கள் அடையக்கூடும். முசிறி கடற் கொள்ளைக்காரரால் தாக்கப்படுவதால், பிரயாணிகள் பக்கரே (வைக்கரை)யில் இறங்க விரும்புகின்றனர்” என்றும் கூறியுள்ளார்.[3]
கி. பி 60 இல் பெரிப்ளுஸ் என்னும் நூலை எழுதிய ஆசிரியர் இந்தியத் துறைமுகங்களை நேரில் கண்டு பல செய்திகளைக் குறித்துள்ளார். சேரநாட்டில் தொண்டி, முசிறி, குமரி என்ற துறைகளையும், பாண்டிய நாட்டில் கொற்கைத் துறைமுகத்தையும், சோழ நாட்டில் காவிரிப் பூம்பட்டினத்தையும் குறித்துள்ளார்; கொற்கையில் கொடிய குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டவரே முத்துக்குளித்து வந்தனர் என்று கூறியுள்ளார்; உறையூர் முத்து வாணிகத்திற்குப் பெயர்போனது என்றும் குறித்துள்ளார்; கிழக்குக்