பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

110



இது முதல் தொகுதியிலுள்ள ஒரு பாடல்தான். நென்னல் என்ற சொல்லும் நெருநல் என்ற சொல்லும் முன்நாள் அதாவது நேற்று என்பதைக் குறிக்கும்—என்பது இதன் பொருளாகும். இந்தப் பாடலில் ‘நேற்று’ என்னும் சொல் விடப்பட்டுள்ளதன்றோ? இவ்வாறு விடுபட்ட சொற்கள் மிகப் பலவாம். ஆதலின், நிகண்டுகளைக்கொண்டு தமிழ்மொழியின் சொற் கருவூலத்தை அளந்து எண்ணிக்கையிட்டு முற்றுப்புள்ளி வைத்துவிடக்கூடாது.

அடுத்து இன்னொரு கருத்து ஆராய்ச்சிக்குரியது. தமிழ்மக்கள் சித்திரைத் திங்களைத் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாகக் கொண்டாடுகின்றனர். தைத் திங்களைத் தமிழ்ப் புத்தாண்டின் தொடக்கமாகக் கொண்டாடும் ஒருசார் மரபும் நிலவி வருகிறது. இப்பொழுதே போட்டி போட்டுக்கொண்டிருக்கும் இந்த இரண்டு திங்களுக்கிடையே புதிதாக மற்றொரு திங்கள் (மாதம்) போட்டியாக முளைப்பதற்குத் திவாகரம் இடம்தரும்போல் தெரிகிறது. அது வருமாறு:–

தமிழ் வழக்குப்படி இரண்டு திங்கள்கள் கொண்டது ஒரு பருவமாகும். எனவே, பன்னிரண்டு திங்கள்கள் கொண்ட ஓர் ஆண்டினைப் பின்வருமாறு ஆறு பருவங்களாகப் பகுக்கலாம்:–

சித்திரை, வைகாசி—இளவேனில் பருவம்.
ஆனி, ஆடி—முதுவேனில் பருவம்.
ஆவணி, புரட்டாசி—கார்ப் பருவம்.
ஐப்பசி, கார்த்திகை—கூதிர்ப் பருவம்.
மார்கழி, தை—முன்பனிப் பருவம்,
மாசி, பங்குனி—பின்பனிப் பருவம்.