பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

111


இதுபற்றிக் கூறும் திவாகரப் பாடல் வருமாறு:

(அறுவகைப் பருவம்)

“காரே, கூதிர், முன்பனி, பின்பனி,
சீர் இளவேனில், முதுவேனில் என்றாங்கு
இருமூன்று வகைய பருவம் அவைதாம்
ஆவணி முதலா இரண் டிரண்டாக
மேவின திங்கள் எண்ணினர் கொளலே.”

இப்பாடல் கார் முதலிய ஆறு பருவங்களையும் முதலில் குறிப்பிட்டு, பிறகு இப்பருவங்கட்கு உரியனவாக ஆவணி முதலாக இரண்டிரண்டு திங்கள்களாக எண்ணிச் சேர்த்துக் கொள்க—என்று கூறுகிறது. இங்கே கார்ப்பருவமாகிய ஆவணியை முதலில் தொடங்கிக் கூறியிருப்பதில் ஏதோ பொருள் இருக்கிறது. சூடாமணி முதலிய நிகண்டுகளிலும் இவ்வாறே ஆவணி தொடங்கப்பட்டுள்ளது.

“பரவிய காரே கூதிர்
     முன் பினிற் பனிக ளோடு
விரவிய இளைய வேனில்
     விரைந்திடு முதிய வேனில்
மருவும் ஆவணியே ஆதி
     மற்றிரண் டிரண்டு மாதம்
பருவம் மூவிரண்டும் ஆய்ந்து
     பார்த்திடின் வாய்த்த பேராம்.”

என்பது சூடாமணி நிகண்டுப் பாடல்.

இவற்றில் மட்டுமா? மூவாயிரம் ஆண்டுகட்கு முன் இயற்றப்பட்ட தொல்காப்பியத்திலும்,

“காரும் மாலையும் முல்லை குறிஞ்சி
கூதிர் யாமம் என்மனார் புலவர்”

எனக் கார்ப்பருவமே முன்னர்த் தொடங்கப்பட்டுள்ளது. இடைக்காலத்தில் எழுந்த அகப்பொருள் விளக்கம் என்னும் நூலிலுங்கூட,