பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

118



ஆசிரியர் ‘கணக்காயர்’ என்று அழைக்கப்பட்டது பொருத்தம்தானே! இப்படி எத்தனையோ செந்தழிழ்ச் செல்வங்களை இழந்துவிட்டு இன்னொரு மொழியிலிருந்து சொற்களை இரவல் வாங்கிக்கொண்டிருக்கிற நாம் மிகவும் இரங்கத்தக்கவரல்லவா! இனி மற்றும் சில செல்வங்களைக் காண்பாம்:-

(பெருமையில் சிறந்தோன் பெயர்)

“அண்ணலும் குரிசிலும் ஏந்தலும் தோன்றலும்
செம்மலும் பெருமையிற் சிறந்தோன் பெயரே.”

அண்ணல், குரிசில், ஏந்தல், தோன்றல், செம்மல் என்னும் சொற்கள் சிறந்த பெருமையுடையவரைக் குறிக்குமாம். எவ்வளவு இனிய பெயர்கள்!

மக்கள் பேச்சுவழக்கில் ‘உலகம்’ என்னும் சொல்லை அடிக்கடி பயன்படுத்துவது உண்டு. ‘இப்படி நடந்தால் உலகம் என்ன நினைக்கும்?’ ‘உலகம் என்ன பேசும்?’ ‘உலகத்திற்கு அஞ்சி வாழ்க்கை நடத்த வேண்டும்’—என்னும் பேச்சு வழக்குத் தொடர்களில் உள்ள உலகம் என்னும்சொல் உலகத்திலுள்ள தாழ்ந்த குணமுடையோரைக் குறிக்கவில்லை. உயர்ந்த பண்பாளரையே குறிக்கும். ஆம்! உயர்ந்தவர்க்கே உலகம் உரியது. அவராலேயே உலகம் நன்கு இயங்குகிறது. இக்கருத்தினை,

“உலகம் என்பது உயர்ந்தோர் மாட்டே.”

என்னும் திவாகர நூற்பா நன்கு புலனாக்கும்.

அடுத்து, பொதுவாக அரசர்களையும் சிறப்பாகச் சேர சோழ பாண்டிய மன்னர்களையும் குறிக்கும் பெயர்களைப் பற்றிய பகுதிகளைப் பார்ப்போம்: