பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

147


“செங்கைநிதி அம்பல் சேந்தன் செங்கையில்
சங்கின் வடிவினது சங்க நிதியே.”

“தேமலர் அலங்கல் சேந்தன் செங்கையில்
தாமரை வடிவினது பதும நிதியே.”

என்பன திவாகரப் பாடல்கள். வாய்ப்புக் கிடைத்தபோது வள்ளல் சேந்தனைப் பாராட்ட ஆசிரியர் மறக்கவில்லை. இஃது அவரது செய்ந்நன்றி மறவாச் சீர்மைக்கு எடுத்துக்காட்டு! மேலும் சில செய்திகள் காண்பாம்:

“சாணி புண்ணிய சாந்தம் எனப்படும்”

என்னும் நூற்பாவால், மாட்டுச் சாணத்தை மக்கள் மிகவும் உயர்வாக மதிப்பது புலனாகும். மற்றும் பிட்டு, அஃகுல்லி, இடி, மோதகம், பில்லடை, அப்பம் முதலிய உணவுப் பண்டங்களும் ஈண்டு குறிப்பிடப்பட்டுள்ளன. பூரிகம், நொலையல், கஞ்சம், தோசை, என்னும் தின்பண்டங்கள் அப்பவகையைச் சேர்ந்தனவாம்.

“பூரிகம், நொலையல், கஞ்சம், தோசை
பேதவகைப் பெயர் அப்ப மாகும்.”

“அப்பம், பிட்டொடு, அஃகுல்லி, இடியெனச்
செப்பிய வெல்லாம் சிற்றுண்டி யாகும்.”

சிற்றுண்டி என்னும் சொல், ‘டிஃபன்’ (Tiffen) என்னும் ஆங்கிலச் சொல்லுக்கு நேராக இக்காலத்தில் புதிதாகப் படைத்துக்கொண்ட தமிழ்ச்சொல் அன்று அது பழைய செந்தமிழ்ச்செல்வமே என்பது, மேலுள்ள திவாகர நூற்பாவால் புலனாகும்.