பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

149


ஆறு என்றால் வழி - உணா என்றால் உணவு; எனவே, ஆற்றுணா என்றால், வழிப்பயணத்தில் உண்ணும் உணவு (மூட்டை) என்று பொருளாம். தோட்கோப்பு(தோள்+கோப்பு) என்றால் தோளில்கோத்துத் (மாட்டித்) தொங்கும்பொருள் என்று பொருளாம்; எனவே, அக்காலத்தில் கட்டு சோற்று மூட்டையைத் தோளில் மாட்டித் தொங்கவிட்டுக்கொண்டு போயினர் என்பது புலப்படும். இந்த நாகரிகக் காலத்திலும் எந்தெந்தப் பொருளையோ ஒரு வகைப் பையில் போட்டு அடைத்து இளம் பெண்களும் — ஆண்களுங்கூடத் தோளில் மாட்டித் தொங்கவிட்டுக்கொண்டு போகிறார்கள் அல்லவா? இவ்வகைப் பைக்குத் ‘தோட் கோப்பு’ என்னும் அழகிய பெயரை நாம் சூட்டலாமே. ஏனெனில், ஊருக்கு ஊர் உணவுக் கடைகள் ஏற்பட்டுவிட்டதால் கட்டு சோற்று மூட்டை கரைந்து காணாமற் போய்விட்டதன்றோ இக்காலத்தில்?

இவ்வாறு பழைய சொற்கிடங்கிற்குள் புகுந்து பார்த்தால் எண்ணற்ற சொற்கள் இக்காலத்திற்கு ஏற்புடையனவாகக் கிடைக்கலாம்.