பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

168



பதியவைத்துக் கோழிபோல் குந்திக்கொண்டிருப்பதற்குக் ‘குஞ்சித்தல்’ என்று பெயராம்.

“குந்திய கால்நிலை குஞ்சித்த லாகும்.”

அவமதிப்பாக இகழ்ச்சியாகச் சிரிப்பதற்கு ‘அசி’ என்று பெயராம்.

“அசி அவமதிச் சிரிப்பா மென அறைவர்.”

இவ்வாறு பலவகைச் செயல்கள் இத் தொகுதியில் பேசப்பட்டுள்ளன.

இன்னார்க்குத்தான் கொடுப்பது, இப்போதுதான் கொடுப்பது, இத்தனை முறைதான் கொடுப்பது, இன்னதுதான் கொடுப்பது, இவ்வளவுதான் கொடுப்பது என்ற வரன்முறை - வரையறை இல்லாமல், அம்பல் சேந்தனைப் போல, எல்லோர்க்கும், எப்போதும், எத்தனை முறையும், எதனையும், எவ்வளவும் கொடுப்பதற்குக் ‘கொடை மடம்’ என்று பெயராம் - என்று கூறுமுகத்தான், இத்தொகுதியிலும் நன்றியறிதலாகத் திவாகரர் சேந்தனைச் சிற்பித்துள்ளார்:

“திடமொழி அம்பல் சேந்தனை ஏய்ந்த
கொடைமடம் வரையது கொடுத்த லாகும்.”

என்பது அந்நன்றியறிவுப் பாடலாகும்.