பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

172



ஒன்றும் பேசாமல்—செய்யாமல் சும்மா இருத்தலுக்கு வாளா இருத்தல் என்பது பெயர்:

“வாளா என்கிளவி பேசா என்றாகும்.”

போருக்கு—அதாவது, போட்டிக்கு—விவாதத்திற்கு அழைப்பது அறைகூவல் ஆகும்.

“அறைகூவல் பொர அழைத்தல்.”

கல்வியையும் கற்றலையும் குறிக்கும் பெயர்கள் கருதத்தக்கன:

“உறுதியும், சால்பும், ஓதியும், அறிவும்,
கலையும், கேள்வியும், கல்வி யாகும்.
வித்தை, சாலம், விஞ்சை, ஊதியம்,
மற்றிந் நான்கும் கல்வியின் நாமம்.”

“நவிலல், கெழுமல், பயிலல், கற்றல்.”

உறுதி (நன்மை), சால்பு (பெருந்தன்மை), அறிவு, ஊதியம் என்னும் பெயர்கள் கல்விக்கு இருப்பதை ஊன்றி நோக்கின் கல்வியின் பயனும் சிறப்பும் புலப்படும். கலைகளைக் கற்பதும் கல்வியே என்பது ஈண்டு கருதத்தக்கது. “கேள்வியும் கல்வியாகும்” என்ற தொடரிலிருந்து, கல்வியறிவும் பட்டறிவும் நிறைந்த பெரியோர்களின் சொற்பொழிவு விளக்கங்களைக் கேட்டுத் தெரிந்து கொள்வதும் கல்வியாகும் என்பது புலனாகும். தாமாகப் படிக்க வாய்ப்பில்லாதவர்கள் கேட்டாவது தெரிந்து கொள்ளலாமே ‘கற்றில னாயினும் கேட்க’ என்பது வள்ளுவர் வாய்மொழியன்றே!

இலக்கியம் என்னும் சொல்லுக்கு என்னென்னவோ விளக்கங்கள் கூறப்படுகின்றன. மேலே