பக்கம்:தமிழ் அகராதிக் கலை.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

179



பொருள் தரவில்லையே - என்று கேட்கத் தோன்றும். இப் பதினோராந் தொகுதியில் நேர்முகமாக முந்நூற்று: எழுபத்தேழு சொற்கட்குப் பொருள் கூறப்பட்டிருப்பினும், மற்ற பத்துத் தொகுதிகளில் மறைமுகமாகப் பல்லாயிரக்கணக்கான (9500) சொற்கட்குப் பொருள் கூறப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, - முதல் தொகுதியில் முதல் பாவில் சிவனைக் குறிப்பனவாக அறுபத்து மூன்று பெயர்கள் கூறப்பட்டுள்ளன. அப்படியென்றால், அந்த அறுபத்து மூன்று பெயர்கட்கும் சிவன் என்று பொருள் (அர்த்தம்) எழுதிவிட்டதாகத்தானே பொருள் கொள்ள வேண்டும்? இவ்வாறே எல்லாத் தொகுதிகளிலும் உள்ள எல்லாச் சொற்களுமே பொருள் விளக்கம் செய்யப்பட்டிருப்பதாகக் கொள்ளவேண்டும்.

ஏன், இந்தத் தொகுதியிலுங்கூட, முந்நூற்று எழுபத்தேழு சொற்களின் பொருள்களாகப் பல சொற்கள் தரப்பட்டுள்ளன அல்லவா? அந்தப் பல சொற்களின் பொருள்களாக இந்த முந்நூற்று எழுபத்தேழு சொற்களையும் கொள்ளவேண்டும். இவ்வாறாக இந்தத் தொகுதியிலும் எண்ணற்ற சொற்கள் இடம், பெற்றிருத்தலை அறியலாம்.

இத் தொகுதியினும் இக்கால அகராதிகளில் சொற்கள் மிக்கிருப்பதற்குத் தக்க பொருட்டுகள் (காரணங்கள்) வேறு சிலவும் உண்டு. அவை யாவன:- ஒன்று: பேச்சு வழக்கில் உள்ள எல்லா எளிய சொற்களும் இக்கால அகராதியில் இடம் பெற்றுள்ளன. அங்ஙனமின்றி ஓரளவு அரிய சொற்கள் ம்ட்டுமே நிகண்டில் இடம் பெற்றுள்ளன. எளிய சொற்கட்குப் பொருள் எழுதிக்கொண்டு கிடக்க வேண்டியதில்லை என்பது நிகண்டு நூலாரின் கருத்தாயிருக்கலாம்.